உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தீபாவளி பட்டாசு கடைகளுக்கு கட்டுப்பாடு! புதிய விதிமுறைகளை அறிவித்தது மாவட்ட நிர்வாகம்

தீபாவளி பட்டாசு கடைகளுக்கு கட்டுப்பாடு! புதிய விதிமுறைகளை அறிவித்தது மாவட்ட நிர்வாகம்

கோவை, செப். 10-தீபாவளி பட்டாசு விற்பனைக்கு, தற்காலிக கடை அமைக்க மாவட்ட நிர்வாகம் இந்த முறை ஏராளமான விதிமுறைகளை வகுத்துள்ளதோடு, பல விஷயங்களுக்கு தடையும் விதித்துள்ளது.வரும் அக்.,31ல், தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தற்காலிக பட்டாசு கடை நடத்த விரும்புவோர், ஒற்றைச்சாளர முறையில் இ-சேவை மையம் வாயிலாக, மாவட்ட வருவாய் அலுவலரிடம், லைசென்ஸ் பெற விண்ணப்பிக்க வேண்டும்.தமிழக அரசின் வெடிபொருள் சட்ட விதிகள், 2008ன் கீழ், விண்ணப்பங்களை அக்.,6 வரை http://tnedistrict.tn.gov.inஎன்ற இணைய முகவரியில், இ-சேவை மையம்வாயிலாக விண்ணப்பிக்கலாம்.பட்டாசு கடை வைக்கும் இடத்தின், புலவரைபடம் ஸ்கேன் செய்து அப்லோடு செய்ய வேண்டும். உரிமம் கோருபவர், இடத்தின் உரிமையாளராக இருந்தால், அதற்கான ஆவணங்களை இடத்திற்கான சொத்துவரி செலுத்திய ரசீது நகலுடன், இணைக்க வேண்டும்.வாடகை கட்டடமாக இருந்தால்,சொத்துவரி நகலுடன் கட்டட உரிமையாளரிடம் 20 ரூபாய்க்கான முத்திரைத்தாளில் பெற்ற, அசல் சம்மத கடிதம் பெற வேண்டும். அரசுக்கணக்கில், 700 ரூபாய் செலுத்தியதற்கான அசல் செலுத்து சீட்டு, இ-சேவை மையம் வாயிலாக பதிவேற்ற வேண்டும்.மனுதாரரின் பாஸ்போர்ட் அளவு போட்டோ ஸ்கேன் செய்து, பான்கார்டு எண், ஆதார் எண், ஸ்மார்ட் ரேஷன் கார்டு ஆகியவற்றோடு சேர்த்து இணைக்க வேண்டும்.இது குறித்து, கலெக்டர் கிராந்திகுமார் கூறியதாவது:அரசு வகுத்துக்கொடுத்துள்ள விதிமுறைகளையும், நிபந்தனைகளையும் தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.வருவாய்த்துறை, தீயணைப்புத்துறை, போலீசார் ஆய்வுக்குப்பின்னரே, பட்டாசு விற்க அனுமதி வழங்கப்படும். எந்த சூழலிலும் தீ விபத்து ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும்.தீ விபத்து தடுப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். மிகுந்த கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் இருப்பது அவசியம்.இவ்வாறு, கலெக்டர் கூறினார்.

புதிய விதிமுறைகள் என்ன?

n பட்டாசு கடை 9 ச.மீ.,முதல் 25 ச.மீ.,க்குள் இருப்பது அவசியம். சாலையை ஒட்டி அமைந்திருப்பதோடு, குறைந்தது 20 அடிக்கு அதிகமுள்ள சாலையாக இருப்பது அவசியம்.n அவசரகாலத்தில் தீயணைப்பு வாகனங்கள் வந்து செல்லும் வசதி இருக்க வேண்டும். தரைதளத்தில் மட்டுமே கடை நடத்த வேண்டும். மேல்தளத்தில் பட்டாசு இருப்பு வைக்கக்கூடாது.n பட்டாசு கடை அமைய உள்ள இடத்திற்கு, 50 மீ., சுற்றுப்புறத்தில் மருத்துவமனை, பள்ளி, வழிபாட்டு தலம், திருமண மண்டபம், வணிக வளாகங்கள், திரையரங்குகள் தொழிற்சாலைகள், நெடுஞ்சாலை, ரயில்பாதை, நீர்வழி தேக்கம், நிலத்தடி குழாய் வழிதடங்கள், உயர்மின் அழுத்த கம்பிகள், எளிதில் தீப்பற்றும் பொருட்கள் உள்ள பகுதிகள், டீக்கடைகள், மக்கள் அதிகம் கூடும் பகுதிகள், பஸ் ஸ்டாப், பஸ் ஸ்டாண்ட், கடைதெருக்கள் இருக்கக்கூடாது.n பட்டாசு கடை கட்டடத்தில், இரு வழித்தடங்கள் இருப்பது அவசியம். அதில் அவசரகால வழி, கடையிலிருந்து உடனடியாக வெளியேறும் வகையில் அமைக்க வேண்டும்.n பட்டாசு கடைகள் அமையும் இடத்தில், ஒரு கடைக்கும் மற்றொன்றுக்கும் இடையில், 3 மீட்டர் இடை வெளி அவசியம். திருமண மண்டபங்கள், அரங்கங்கள், சமுதாய கூடங்களில் பட்டாசு கடை அமைக்கக் கூடாது.

'விதிமுறைகள் கொஞ்சம் ஓவர்'

பட்டாசு வியாபாரி செல்வராஜ் என்பவர் கூறுகையில், ''மாவட்ட நிர்வாகம் விதித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை, தவறாமல் பின்பற்ற தயாராக இருக்கிறோம். அதேசமயம், பட்டாசு வியாபாரிகளின் நலனுக்காக, சில விஷயங்களில் விதிமுறைகளை தளர்த்த வேண்டும். தற்காலிக வியாபாரிகளுக்கு இந்த விதிமுறைகளை விதிப்பதற்கு பதிலாக, நிரந்தர பட்டாசு லைசன்ஸ் வைத்திருப்பவர்களுக்கு அறிவுறுத்துவதே சரி,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை