கோவை:''கோவை விமான நிலைய விரிவாக்கப் பிரச்னையில் உள்ள சிக்கல்களுக்கு விரைந்து தீர்வு காண்பேன்,'' என, கோவையில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர் ராஜ்குமார் கூறினார்.அவர், மேலும் கூறியதாவது:ஆண்டவன் புண்ணியத்தில், இத்தேர்தலில் வெற்றி பெற்று, எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டால், கண்டிப்பாக, கோவை விமான நிலைய விரிவாக்கம் தொடர்பான சிக்கல்களுக்கு தீர்வு காண, தமிழக அரசுக்கும் - மத்திய அரசுக்கும் இடையே பாலமாக இருந்து செயல்படுவேன். கோவை ரயில்வே ஸ்டேஷனை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பது, 20 ஆண்டு கோரிக்கை. ரயில்வே ஸ்டேஷனை புதுப்பிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். 'வந்தே பாரத்' ரயில்கள் இயக்கப்பட்டாலும், கோவை - பெங்களூரு, கோவை - சென்னைக்கு இரவு நேரங்களில் செல்லக்கூடிய சாதாரண ரயில்கள் கூடுதலாக இயக்க முயற்சிக்கப்படும். கோவை - மேட்டுப்பாளையத்துக்கு ரயில் சேவை இருப்பதை போல், கோவை - திருப்பூர், கோவை - ஈரோடு, கோவை - பொள்ளாச்சி சென்று வருவதற்கு ரயில்கள் இயக்கப்படும்.நம்மூரை சேர்ந்த சிறு, குறு தொழில் நிறுவனத்தினர் வெளிநாடுகளுக்கு சென்று கண்காட்சிகளை பார்வையிடுவதற்கான மானியம், மூலதன மானியம் பெற்றுத்தருவேன். என்.டி.சி., மில்களுக்கு சொந்தமான பல நுாறு ஏக்கர் நிலங்களை பயனுள்ள திட்டங்களுக்கு பயன்படுத்த, மேயராக இருந்தபோதே முயற்சித்தேன். எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டதும், அந்நிலங்களை மத்திய அரசு திட்டங்களுக்கோ அல்லது மாநில அரசு திட்டங்களுக்கோ பயன்படுத்த நடவடிக்கை எடுப்பேன்.எம்.எல்.ஏ.,க்களுக்கு ஒவ்வொரு தொகுதியிலும் அரசு சார்பில் அலுவலகம் கட்டிக் கொடுத்திருப்பதைபோல், நகரில் எம்.பி., அலுவலகம் கட்டுவதற்கு முயற்சிப்பேன். தமிழகத்தில் இருந்து கோரிக்கைகளுடன் வருவோருக்காக, டில்லியிலும் அலுவலகம் அமைக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.