உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இளைஞர்களிடைய செல்பி மோகம் ரோட்டில் ஆபத்தை உணர்வதில்லை

இளைஞர்களிடைய செல்பி மோகம் ரோட்டில் ஆபத்தை உணர்வதில்லை

பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே, ஆழியாறு பகுதிக்கு வரும் சுற்றுலா பயணியர், 'செல்பி' மோகத்தில், தங்களையே மறந்து, ஆபத்தான சூழலில் போட்டோ எடுக்க முற்படுகின்றனர்.இளைஞர்களிடையே ஸ்மார்ட் போன் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், பலரும், தனக்குத் தானே 'போட்டோ' மற்றும் வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவிடுகின்றனர்.அவ்வகையில், 'செல்பி'யின் அடுத்தகட்டமாக மிக உயர்ந்த இடங்கள், தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடும் ஆறுகள், மலை உச்சி போன்ற இடங்களில் செல்பி எடுப்பதை சிலர், சாகசமாகக் கருதுகின்றனர்.அந்த வரிசையில், பொள்ளாச்சி அருகே ஆழியாறு அணைப்பகுதிக்கு வரும் சுற்றுலா பயணியர் சிலர், 'செல்பி' மோகத்தில், தங்களையே மறந்து, ஆபத்தான சூழலில் போட்டோ எடுக்க முற்படுகின்றனர். குறிப்பாக, ரோட்டை மறித்து, எவரையும் பொருட்படுத்தாமல் 'போட்டோ' எடுப்பது, விபத்துக்கு வழிவகுப்பதுபோல் உள்ளது.தன்னார்வலர்கள் கூறியதாவது: ஆழியாறு, வால்பாறை உள்ளிட்ட சுற்றுலாத்தலங்களுக்கு வார இறுதி நாட்களில், அதிகப்படியான சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர். அவர்களில், வாலிபர்கள் சிலர், தங்களை ஹீரோவாக உருவகப்படுத்தி, டூ-வீலரை அதிகவேகமாக இயக்கச் செய்கின்றனர்.அதனை போட்டோ மற்றும் வீடியோ எடுக்கின்றனர். இதனால், அவ்வழித்தடத்தை கடந்து செல்லும் பிற வாகன ஓட்டுநர்கள், செய்வதறியாது திணறி வருகின்றனர்.இது ஒருபுறமிருக்க, வாகனங்கள் கடந்து செல்லும் ரோட்டில், எதையும் பொருட்படுத்தாமல் செல்பி எடுக்க முற்படுவது, பேராபத்தை ஏற்படுத்தும். போலீசார் அவ்வப்போது, ரோந்து சென்று, அத்துமீறலில் ஈடுபடுவோருக்கு அபராதம் விதித்து கட்டுப்படுத்த வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !