கோவை:கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள வாத்து, கோழி பண்ணைகளில் பறவைகள் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டு இருப்பதால், தமிழக - கேரள எல்லைப் பகுதிகளில் கால்நடைகள் பராமரிப்பு துறை சார்பில், முன் எச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.இது குறித்து, கோவை மாவட்ட கால்நடைகள் பராமரிப்புத்துறை இணை இயக்குனர் பெருமாள்சாமி கூறியதாவது:கேரளாவில் உள்ள ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள, இரண்டு கிராமங்களில் ஹெச்5என்1 என்ற வைரஸ் பரவல் காரணமாக, பறவைக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. பரிசோதனையில், வைரஸ் பதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.இது, தமிழகத்திலும் பரவ வாய்ப்பு இருப்பதால், கோவையில் உள்ள 12 சோதனை சாவடிகளிலும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. கோவையில் 1652 கோழிப்பண்ணைகள் உள்ளன. அனைத்து பண்ணைகளும் கண்காணிக்கப்பட்டு, தடுப்பு நடவடிக்கைள் எடுக்கப்பட்டு வருகின்றன. அறிகுறிகள் இதுதான்
கோழிகளின் தலைவீக்கம், கண்களில் நீர் வடிதல், தொடைப்பகுதியில் ரத்தக்கட்டு உள்ளிட்ட அறிகுறிகள் இருக்கும். இங்குள்ள கோழிப்பண்ணைகளில் இந்த அறிகுறிகள் இல்லை.கேரளாவில் கோழிகளை விட, வாத்துப் பண்ணைகள் அதிகம் இருப்பதால், அங்கு வாத்துக்களை இந்த நோய் தாக்கியுள்ளது. கோவைக்கு வாத்து, விற்பனைக்கு கொண்டு வரப்படுவதில்லை. ஆழியாறு, ஆனைமலை பகுதிகளுக்கு கொண்டு வரப்படுகிறது. அங்கு விற்பனை தடுக்கப்பட்டுள்ளது.கேரளாவில் இருந்து வரும் கோழி, முட்டை, குஞ்சு, தீவனம் மற்றும் எரு உள்ளிட்டவற்றை, இங்கு கொண்டு வர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து கேரளாவுக்கு கொண்டு செல்ல, சான்றுகளுடன் அனுமதிக்கப்படுகிறது.தமிழகத்தில் பறவை காய்ச்சல் தொற்று இல்லை. கோழிப் பண்ணையாளர்கள் அச்சப்பட வேண்டாம். இது வெயில் காலம் என்பதால், கோழிப்பண்ணை வைத்து இருப்பவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.