குன்னுாரில் விதிமீறல் கட்டடத்திற்கு சீல்
குன்னுார்; குன்னுார் உபதலை ஊராட்சியில் விதிமீறி கட்டப்பட்ட பிரம்மாண்ட கட்டடத்திற்கு 'சீல்' வைக்கப்பட்டது.நீலகிரி மாவட்டத்தில் கட்டடங்கள் கட்டுவதற்கு பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டன. சாதாரண உள்ளூர் மக்கள் சிறிய வீடுகள் கட்ட முடியாத நிலையில், பணம் படைத்தவர்களால் விதிகளை மீறி, பிரம்மாண்ட கட்டடங்கள் மிகவும் எளிதாக கட்டப்பட்டு வருகிறது.இந்நிலையில், குன்னுார் உபதலை ஊராட்சி, கரோலினா பகுதியில், 25 ஆயிரம் சதுர அடியில் பல கட்டடங்கள் கட்டப்பட்டு வருவதாகவும், சுற்றுலா பயணிகளுக்கு காட்டேஜ் நடத்தி வருவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது. இதன் பேரில், நேற்று குன்னுார் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெய்சங்கர் தலைமையில் ஊராட்சி அதிகாரிகள், வருவாய் துறையினர், போலீஸ் பாதுகாப்புடன் அங்கு சென்றனர்.அதில், ரமேஷ் ரெட்டி, பத்மா என்பவர்களின் பெயர்களில், 'தலா, 2,500 சதுர அடி' என, இரு அனுமதி பெற்று, ஒரே கட்டடமாக கட்டியதுடன், 468 சதுர அடியில் இரண்டு தளம் கட்டப்பட்டதும், தெரிய வந்தது. இதை தொடர்ந்து கட்டடத்துக்கு 'சீல்' வைக்கப்பட்டது.