கோவை;கோவை மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் கல்லுாரிகள், தனியார் கல்லூரிகளில் இலவச கல்வித் திட்டம் முறையாக அமல்படுத்தப்படாததால், இதனைக் கண்காணிக்க உரிய குழு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை, கல்வியாளர்கள் மத்தியில் வலுத்து வருகிறது.பாரதியார் பல்கலையின் கீழ் செயல்படும் கல்லூரிகளில், இலவச கல்வித் திட்டம் கடந்த 2006ம் ஆண்டு செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் மூலம், அதிக மதிப்பெண்கள் பெற்றும் வறுமை காரணமாக படிப்பைத் தொடர முடியாத மாணவர்களை, கல்லூரிகளில் சேர்க்க முடியும்.இத்திட்டம் துவங்கப்பட்ட முதல் இரண்டு ஆண்டுகள், நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயனடைந்தனர். இத்திட்டத்தில் விதிமுறைகள் மீறப்பட்டதால், 2017ம் ஆண்டு இத்திட்டம் கைவிடப்பட்டது.பல்வேறு ஆய்வுகள் செய்யப்பட்டு, 2022--23ம் கல்வியாண்டில், ஒரு கல்லூரிக்கு 15 மாணவர்கள் இத்திட்டத்தில் பயன்பெறும் வகையில், மீண்டும் அமல்படுத்தப்பட்டது.கல்லூரிகளில் துறைக்கு தலா 3 பேர் என, 15 பேரை இத்திட்டத்தின் கீழ் சேர்த்துக் கொள்ள முடியும். இதன் மூலம் பல்கலையின் கீழ் உள்ள கல்லூரிகளில், சுமார் 1,500 மாணவர்கள் இலவச கல்வி பெற முடியும்.கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர்களுக்கு, ஜூலை 3ம் தேதி முதல் வகுப்பு துவங்கவுள்ள நிலையில், இலவச கல்வி திட்டத்தின் கீழ் எவ்வளவு மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது குறித்து, முறையான ஆய்வு மேற்கொள்வதில்லை. இதனால், பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை மாணவர்கள், தங்களுக்கான வாய்ப்பை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பாரதியார் பல்கலையில் துணைவேந்தர் உள்ளிட்ட, முக்கிய பணியிடங்கள் காலியாக உள்ளதால், திட்டங்களை செயல்படுத்துவது, கண்காணிப்பது உள்ளிட்ட பணிகளில் தொய்வு ஏற்படுவதாகவும், பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாகவும், பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
'அட்மிஷன் கொடுக்கணும்'
பல்கலைக்கழக பதிவாளர் ரூபா கூறுகையில், இலவச கல்வித் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு அட்மிஷன் வழங்க, அனைத்துக் கல்லூரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சேர்க்கை அதிகமாக உள்ள கல்லூரிகளில், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சேர்க்கை குறைவாக உள்ள கல்லூரிகளில் கட்டாயப்படுத்துவதில்லை. எவ்வளவு மாணவர்கள் இத்திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது குறித்து, ஆய்வு செய்ய முறையான குழு இல்லை, என்றார்.