வால்பாறை: பி.ஏ.பி., அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால், பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.இந்த ஆண்டு பெய்யும் தென்மேற்கு பருவமழையினால், பரம்பிக்குளம் -- ஆழியாறு பாசன திட்டத்தின் முக்கிய அணைகளில் ஒன்றான, சோலையாறு அணை கடந்த, 19ம் தேதி நிரம்பியது. இதனை தொடர்ந்து சேடல் டேம் வழியாக பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. தொடர்ந்து, 8வது நாளாக அணை நிரம்பிய நிலையில் காட்சியளிக்கிறது.கனமழையால், சோலையாறு அணையின் நீர்மட்டம் காலை, 162.15 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 3,317 கனஅடி தண்ணீர் வரத்தாக உள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு, 2,841 கனஅடி வீதம் பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதனால், பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் காலை, 44.60 அடியாக உயர்ந்தது.தென்மேற்குப்பருவ மழையினால், பி.ஏ.பி., அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்வதால், பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். காலை, 8:00 மணி வரை பதிவான மழை அளவு (மி.மீ.,): வால்பாறை - 46, சோலையாறு - 43, பரம்பிக்குளம் - 24, ஆழியாறு - 21, மேல்நீராறு - 74, கீழ்நீராறு - 56, காடம்பாறை - 41, மேல்ஆழியாறு - 4, சர்க்கார்பதி - 24, வேட்டைக்காரன்புதுார் - 24, மணக்கடவு - 17, துாணக்கடவு - 28, பெருவாரிப்பள்ளம் - 20, நவமலை - 12, பொள்ளாச்சி - 24 என்ற அளவில் மழை பெய்தது.