உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  ரஷ்ய அதிபர் புடினுக்கு மோடி அளித்த விருந்தில் குச்சி காளான்: கிலோ ரூ.40,000; அப்படியென்ன சிறப்பு?

 ரஷ்ய அதிபர் புடினுக்கு மோடி அளித்த விருந்தில் குச்சி காளான்: கிலோ ரூ.40,000; அப்படியென்ன சிறப்பு?

கோவை: இம்மாதம் 4, 5 ஆகிய தேதிகளில் ரஷ்ய அதிபர் புடின் இந்தியா வந்தார். அப்போது, பிரதமர் மோடி, புடினுக்கு பரிசாக அளித்த கீதை, ஒரே காரில் பயணம் என்பதை தாண்டி, இன்னொரு விஷயம் உலகின் கவனத்தை ஈர்த்தது. அது, உலகின் விலை உயர்ந்த குச்சி காளான் உணவு. புடினுக்கு, ஜனாதிபதி மாளிகையில் அளிக்கப்பட்ட அரச விருந்தில், தென் மாநில முறுக்கு, மேற்கு வங்கத்தின் கர் சந்தேஷ் இனிப்பு, வட மாநிலத்தின் மஞ்சள் பருப்பு தாளிப்பு, திபெத், நேபாள எல்லையோர பகுதிகளின் பிரபலமான ஜோல் மோமோ, வால்நட் சட்னியுடன் பரிமாறப்பட்ட ஜம்மு - காஷ்மீரின் குச்சி காளான் ஸ்டப் என, பிராந்திய உணவுகள் முக்கியத்துவம் பெற்றன. இதில், குச்சி காளான் ஒரு கிலோ, 35,000 முதல் 40,000 ரூபாய் வரை விற்பனையாகிறது. உலகின் விலை உயர்ந்த காளான் ஆன, குச்சி காளானில் அப்படியென்ன சிறப்பு? கோவை, வேளாண் பல்கலையின் பயிர் நோயியல் துறை பேராசிரியரும், காளான் அறிவியல் துறை நிபுணருமான திரிபுவனமாலா கூறியதாவது: 'குச்சி' என அழைக்கப்படும் காளானின் அறிவியல் பெயர் மார்ஷெல்லா எஸ்குலென்டா. ஆங்கிலத்தில் மோரல். ஹிமாச்சல், ஜம்மு - காஷ்மீர், உத்தரகாண்ட் உள்ளிட்ட குளிரான, கடல் மட்டத்தில் இருந்து மிக உயர்ந்த பகுதிகளில், வளமிக்க வனப்பகுதியில் இயற்கையாக காணப்படுகிறது. இதில், நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். கிரீம் நிறம் முதல் அடர் பழுப்பு நிறம் வரை காணப்படும். பார்க்க தேன்கூடு வடிவில் இருக்கும். சாப்பிட மிக மிருதுவாக இருக்கும். அதிக சுவை கொண்டது. மிக நல்ல வாசனை கொண்டது. இறைச்சி போன்ற உணர்வை தரும். இது ராஜ உணவு என்றே அழைக்கப்படுகிறது. பனி முடிந்த வசந்த காலங்களில், ஏப்., - ஜூன் வரையிலான காலகட்டங்களில் அதிகம் விளையும். வளர்வதற்கு 15 முதல் 20 டிகிரி செல்ஷியஸ் வரையிலான குளிர்நிலை தேவைப்படும். அடர்ந்த வனப்பகுதிக்குள் தரைப்பகுதியில் வளரும். அரிதாகவே கிடைக்கும். காட்டுத்தீயால், மண்ணில் பொட்டாசியம், பாஸ்பரஸ், மக்னீசியம் உள்ளிட்ட சத்துகள் அதிகரிக்கும் போது, அந்த நிலத்திலும் நன்றாக வளரும். வெளிநாடுகளிலும் இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது. சீனாவில் கட்டுப்படுத்தப்பட்ட சீதோஷ்ண குடில்களில் சாகுபடி செய்யப்படுகிறது. இந்தியாவில் இருந்து ஐரோப்பா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. குச்சி காளானில், பி1, பி2, பி3, பி5, பி6, சி, டி, டி2 போன்ற வைட்டமின்களும், இரும்பு, செம்பு, துத்தநாகம், பொட்டாசியம், மக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற தாது சத்துக்களும் நிரம்ப உள்ளன. செறிவான நார்ச்சத்து உள்ளது. பெனாலிக்ஸ், பிளவனாய்டுகள் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் நிறைந்தது. குறைந்த கலோரி, அதிக சுவை, நறுமணம் போன்றவற்றால் குச்சி சிறப்பிடம் பெறுகிறது. கட்டுப்படுத்தப்பட்ட சீதோஷ்ண நிலையில், 2.5 ஏக்கருக்கு, 15,000 கிலோ வரை விளைவிக்கலாம். பசுங்காளானாக விற்பனை செய்யப்படுவதை விட, உலர் காளானாக அதிகம் விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு, அவர் தெரிவித்தார். பயிர் நோயியில் துறை தலைவர் அங்கப்பன் கூறுகையில், “தேசிய காளான் இயக்குநரக திட்டத்தின் கீழ், கோவை வேளாண் பல்கலையில், கட்டுப்படுத்தப்பட்ட சீதோஷ்ண குடில் அமைக்கப்பட உள்ளது. ''அந்த சூழலில், குச்சி காளான்களை வளர்ப்பது குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு, படிப்படியாக, விவசாயிகளுக்கு அறிமுகம் செய்யப்படும்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை