தடகள போட்டி; 19 பதக்கங்கள் வென்றது அரசு பள்ளி
கருமத்தம்பட்டி; சூலூர் வட்டார அளவிலான தடகள போட்டிகளில், தங்கம், வெள்ளி உள்ளிட்ட, 19 பதக்கங்களை பெற்று வாகராயம்பாளையம் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர். சூலூர் வட்டார அளவிலான தடகள விளையாட்டு போட்டிகள் தனியார் கல்லூரியில் நடந்தது. இதில், வாகராயம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர், 50 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 3 ஆயிரம், மற்றும் ஆயிரத்து, 500 மீட்டர், 800 மீ., ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்று மாணவ, மாணவியர் தங்கள் முழு திறமையையும் வெளிப்படுத்தினர். வட்டு எறிதலில் தங்க பதக்கமும், ஆயிரத்து, 500 மீட்டர் உள்ளிட்ட, ஆறு வகையான ஓட்டப் பந்தயங்களில், ஆறு வெள்ளி பதக்கங்களும், 12 வகையான மற்ற போட்டிகளில், 12 வெண்கல பதக்கங்களும் பெற்று சாதனை படைத்தனர். இந்த வெற்றிகள் மூலம், சூலூர் வட்டார அளவில் மூன்றாம் இடத்தை பள்ளி பெற்றது. அரசு பள்ளிகளில் வட்டார அளவில் முதலிடத்தையும் பெற்று சாதனை படைத்தது. பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், வெற்றிகளை குவித்த மாணவ, மாணவியருக்கு பாராட்டு தெரிவிக்கப் பட்டது.