ரஜினியின் திரை பயணத்தை கொண்டாட இசைக்கச்சேரி
கோவை, : நடிகர் ரஜினியின் 50 ஆண்டுகால திரை பயணத்தை கொண்டாடும் வகையில் கோவை ஆர்.எஸ் புரத்தில், இசைக்கச்சேரி நடந்தது. திரைப்பட நடிகர் ரஜினிகாந்த், தனது திரை பயணத்தை துவங்கி 50 ஆண்டுகள் ஆகிறது. இதை கொண்டாடும் வகையில், 'மவுன ராகம் முரளி' இசைக்குழுவினர், 'செவன் 11 என்டர்டைன்மென்ட் இன்கார்ப்பரேஷன்' இணைந்து, '50 இயர்ஸ் ஆப் ரஜினியிசம்' என்ற பெயரில், தொடர் இசைக்கச்சேரிகள் நடத்த திட்டமிட்டுள்ளனர். அதன் துவக்கமாக, முதல் இசை நிகழ்ச்சி கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் நேற்று முன்தினம் மாலை நடந்தது. நிகழ்ச்சியில், ரஜினி படங்களின் பல்வேறு சூப்பர் ஹிட் பாடல்களை பாடி அசத்தினர். கோயம்புத்துார் கல்ச்சுரல் குழுவினரின் நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, தாய் மண்ணே ரவி முருகையா, தமிழ் மாநில காங்., பொது செயலாளர் வாசன், 'வாய்ஸ் ஆப் கோவை' நிறுவனர் சுதர்சன் சேஷாத்ரி, நடிகை மதுவந்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். மவுன ராகம் முரளி, செவன் 11 என்டர்டைன்மென்ட் நிறுவனர் பாஸ்கர், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அருண் பிரசாத் ஆகியோர் பங்கேற்றனர்.