ஊட்டி;'குற்றம் சம்பவம் நடந்த கோடநாடு பங்களாவை கோர்ட் பார்வையிட வேண்டும்,' என, எதிர் தரப்பு வக்கீல்கள் சார்பில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.நீலகிரி மாவட்டம், கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு விசாரணை ஊட்டி செஷன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட வாளையார் மனோஜ் கோர்ட்டில் ஆஜரானார். அரசு தரப்பு வக்கீல்கள் ஷாஜகான், கனகராஜ் மற்றும் எதிர் தரப்பு வக்கீல்களான விஜயன்,முனிரத்தினம் ஆகியோர் ஆஜராகினர். பின், வழக்கை விசாரணை செய்த மாவட்ட நீதிபதி அப்துல் காதர், இம்மாதம், 23ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.அரசு வக்கீல் ஷாஜகான் நிருபர்களிடம் கூறுகையில், ''கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக நடந்து வரும் விசாரணை குறித்து, சி.பி.சி.ஐ.டி., போலீசாரிடம் நீதிபதி கேட்டறிந்தார். வழக்கு தொடர்பாக ஆய்வகங்களில் உள்ள தொலை தொடர்பு சாதனங்களின் அறிக்கை கோர்ட்டிற்கு வந்தவுடன், அதன் நகல்களை பெற்ற பின், சி.பி.சி.ஐ.டி., போலீசார் தலைமையில் விசாரணை துவங்கப்படும்,'' என்றார். எதிர்தரப்பு வக்கீல் விஜயன் கூறுகையில், ''கோடநாடு எஸ்டேட்டில் பங்களாவில் கொலை, கொள்ளை சம்பவம் நடந்த இடத்தில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது. அங்கு பல்வேறு துறைகளின் ஆய்வு நடக்க இருப்பதால், நீதிமன்றம் சம்பவ இடத்தை பார்வையிட வேண்டும் என, கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது,'' என்றார் இதன் பின், வழக்கினை இம்மாதம், 23 ம் தேதிக்கு நீதிபதி அப்துல் காதர் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.