கோவை: 'தினமலர்' மாணவர் பதிப்பான 'பட்டம்' மற்றும் எஸ்.என்.எஸ்., கல்விக் குழுமம் இணைந்து நடத்தும், 'பதில் சொல் - பரிசை வெல்' வினாடி-வினா போட்டியில், டாக்டர் வி.கெங்குசாமி நாயுடு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கலைவாணி மாடல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அல்வேர்னியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்று, திறமைகளை வெளிப்படுத்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றனர். தமிழ், ஆங்கிலம் மட்டுமின்றி அறிவியல், கணிதம், சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் மாணவர்களின் பகுத்தறிவு, சிந்தனையாற்றல் மற்றும் பொது அறிவு திறன்களை மேம்படுத்தும் நோக்கில் 'பட்டம்' இதழ் வெளியிடப்படுகிறது. படிப்பின் மீது ஆர்வத்தை ஊக்குவிக்க, மாணவர்களுக்காக, 'தினமலர்' சார்பில் இதுபோன்ற வினாடி-வினா போட்டிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளி அளவில் இறுதி சுற்றில் வெற்றி பெறும் அணிகள், அரையிறுதிக்கு தகுதி பெறுவர். அதிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் எட்டு அணியினர், இறுதிப்போட்டியில் பங்கேற்பர். இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு, சிறப்பு பரிசுகள் வழங்கப்படும். டாக்டர் வி.கெங்குசாமி நாயுடு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி: ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள இப்பள்ளியில் நடைபெற்ற, தகுதி சுற்றில் 195 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். இதில் அதிக மதிப்பெண் பெற்ற 16 மாணவர்கள் எட்டு அணிகளாக பிரிந்து, பள்ளி அளவிலான இறுதிப்போட்டியில் பங்கேற்றனர். பல்வேறு சுற்றுகளாக நடைபெற்ற போட்டியில் 'எச்' அணி வெற்றி பெற்றது. அந்த அணியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவிகள் கெய்ட்வின்லிட்வினா மற்றும் நேகா ஜான் ஆகியோர், அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றனர். இருவருக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. முதல்வர் வெங்கடஸ்ரீ, இறுதிப்போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். கலைவாணி மாடல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி: மதுக்கரையில் உள்ள இப்பள்ளியில் நடைபெற்ற தகுதி சுற்றில், 47 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். இதில் அதிக மதிப்பெண் பெற்ற 16 மாணவர்கள் எட்டு அணிகளாக பிரிந்து, பள்ளி அளவிலான இறுதிப்போட்டியில் பங்கேற்றனர். பல்வேறு சுற்றுகளாக நடைபெற்ற போட்டியில் 'சி' அணி வெற்றி பெற்றது. அந்த அணியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் நித்தீஷ் குமார் மற்றும் ஸ்ரீ ஹரி ஆகியோர் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றனர். இருவருக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. முதல்வர் மீனாட்சி, இறுதிப்போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். அல்வேர்னியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி: ராமநாதபுரத்தில் உள்ள இப்பள்ளியில் நடைபெற்ற தகுதி சுற்றில், 50 மாணவிகள் பங்கேற்றனர். இதில் அதிக மதிப்பெண் பெற்ற 16 மாணவர்கள் எட்டு அணிகளாக பிரிந்து, பள்ளி அளவிலான இறுதிப்போட்டியில் பங்கேற்றனர். பல்வேறு சுற்றுகளாக நடைபெற்ற போட்டியில், 'ஏ' அணி வெற்றி பெற்றது. அந்த அணியை சேர்ந்த, ஏழாம் வகுப்பு மாணவி நந்தனா மற்றும் ஆறாம் வகுப்பு மாணவி யாஷிகா ஆகியோர் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றனர். இருவருக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. முதல்வர் அருட்சகோதரி அனிதா ஜான், இறுதிப்போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். கிப்ட் ஸ்பான்சர்கள்: 'தினமலர்' நாளிதழுடன் எஸ்.என்.எஸ்., கல்விக் குழுமம் இணைந்து நடத்தும் 'பதில் சொல் - பரிசை வெல்' வினாடி-வினா போட்டியில், சத்யா ஏஜென்சிஸ் மற்றும் ஸ்போர்ட்ஸ் லேண்ட் ஆகியவை, கிப்ட் ஸ்பான்சர்களாக இணைந்துள்ளன. கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட பள்ளிகளின் மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்று, தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.