| ADDED : நவ 28, 2025 03:03 AM
மேட்டுப்பாளையம்: மத்திய அரசின் புதிய பாரதம் எழுத்தறிவு திட்டத்தின் கீழ், முதியோர் பலரும் எழுத்தறிவு பெற்று முதல் முறையாக கையெழுத்து போட்டு பழகினர். மத்திய அரசின் புதிய பாரதம் எழுத்தறிவு திட்டத்தின் கீழ், 15 வயதுக்கு மேற்பட்ட எழுத்தறிவில்லாதவர்களுக்கு அடிப்படை கல்வி வழங்கப்படுகிறது. கோவை மாவட்டம் காரமடை கல்வி வட்டாரத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், அல்லது கற்போரின் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள பொது இடங்களில், காலை அல்லது மாலை வேளைகளில் இரண்டு மணி நேர வகுப்புகள் தன்னார்வலர்கள், ஆசிரியர்களால் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது இரண்டாம் கட்டமாக 2,898 பேர் கண்டறியப்பட்டு அவர்களுக்கு எழுத்தறிவு கற்பிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து, காரமடை வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர் சுரேஷ் கூறிய தாவது:- அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேர்க்கை பெறும் மாணவர்களின் விண்ணப்பங்களில் யார் கையொப்பமிடாமல் கைரேகை வைக்கிறார்களோ, அவர்களை அடையாளம் கண்டும், ஆசிரியர்கள் கணக்கெடுப்பின் படியும் தற்போது அடிப்படை எழுத்து பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. எழுத்தறிவு பெறுவோரில் 30 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் வயதானவர்கள். மலைக்கிராமங்களில் பாட்டி, தாத்தாக்கள் படிக்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர். தற்போது வரும் 30ம் தேதி அவர்களுக்கு பரிட்சை உள்ளது. மேலும், எழுத்தறிவு பெற்று முதல் முறையாக கையெழுத்து போட்டு பழகினார்கள். இதனால் அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். இவ்வாறு அவர் கூறினார்.