உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  அத்திக்கடவு திட்ட அதிகாரிகளை வழிமறித்து விவசாயிகள் வாக்குவாதம்

 அத்திக்கடவு திட்ட அதிகாரிகளை வழிமறித்து விவசாயிகள் வாக்குவாதம்

அன்னுார்: அத்திக்கடவு திட்ட அதிகாரிகளை வழிமறித்து விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அன்னுார் ஊராட்சி ஒன்றியத்தில், அல்லப்பாளையம் ஊராட்சி மட்டும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள எம்மாம் பூண்டி நீரேற்று நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இது மிக அதிக தொலைவு என்பதால் இந்த ஊராட்சியில் உள்ள ஐந்து குளங்களுக்கும் அத்திக்கடவு நீர் வருவதில்லை. இதுகுறித்து அல்லப்பாளையம் ஊராட்சி மக்கள் அவிநாசியில் உள்ள அத்திக்கடவு திட்ட அலுவலகத்திலும், எம்மா பூண்டி நீரேற்று நிலையத்திலும் இரண்டு ஆண்டுகளாக பலமுறை புகார் தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று அல்லப்பாளையம் வசவன்குட்டையில் அத்திக்கடவு திட்டத்தில் லேசாக நீர் வந்தது. உடனே விவசாயிகள் அங்கு திரண்டனர். அப்போது அத்திக்கடவு திட்ட உதவி பொறியாளர் மற்றும் ஊழியர்கள் அங்கு வந்தனர். நீர் வருவதை ஆய்வு செய்தனர். அப்போது அங்கு வந்த விவசாயிகள் 'மற்ற ஊராட்சி குளங்களுக்கு இரண்டு ஆண்டுகளாக தண்ணீர் செல்கிறது. எங்களுக்கு இவ்வளவு தாமதம் ஏன். மேலும் தண்ணீர் குறைவாக வருகிறது. குளம் நிறைய பல மாதங்கள் ஆகும்,' என்று அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். இதை அடுத்து அதிகாரிகள், மிரட்டும் துணியில் பேச வேண்டாம் என்று விவசாயிகளை கேட்டுக்கொண்டனர். எனினும் விவசாயிகள் சரமாரியாக புகார் தெரிவித்ததை அடுத்து அதிகாரிகள் ஜீப்பில் ஏறி புறப்பட்டனர். இதைத்தொடர்ந்து விவசாயிகள் சிலர் ஜீப் முன் நின்று தடுத்து வாக்குவாதம் செய்தனர். எனினும் ஜீப் ரிவர்ஸ் எடுக்கப்பட்டு அதிகாரிகள் வேகமாக புறப்பட்டு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை