| ADDED : டிச 19, 2025 05:08 AM
உக்கடம்: உக்கடம் பஸ் ஸ்டாண்ட்டில் இருந்து வெளியே வரும் பஸ்கள், வாலாங்குளம் ரோட்டில் வரும் வாகனங்கள், ஆத்துப்பாலத்தில் இருந்து வரும் வாகனங்கள் உக்கடம் 'ரவுண்டானா' பகுதியில் சந்திக்கின்றன. மாநகராட்சியின் முயற்சியில் சமீபத்தில் தனியார் பங்களிப்புடன் ரவுண்டானா அமைக்கப்பட்டது. இதன் அருகே இரு இடங்களில் பள்ளம் உருவாகியுள்ளது. வாலாங்குளம் ரோட்டில் இருந்து ஆத்துப்பாலம் நோக்கிச் செல்லும் பாதையின் இறக்கத்தில் பெரிய அளவில் பள்ளம் உருவாகியிருக்கிறது. ஜல்லிக்கற்கள் பரவிக் கிடக்கின்றன. பகல் நேரத்தில் வாகன ஓட்டிகள் சற்றுத்தள்ளி சென்று விடுகின்றனர். இரவு நேரத்தில் பள்ளம் தெரிவதில்லை. வாகன ஓட்டிகள் பள்ளத்தில் இறங்கி ஏறும்போது தடுமாற்றம் அடைகின்றனர். மனைவி, குழந்தைகளுடன் வாகனங்களில் செல்வோர் தடுமாறி, கீழே விழுந்து காயமடைகின்றனர். இதேபோல் எதிர் திசையில் ஆத்துப்பாலத்தில் இருந்து உக்கடம் நோக்கி வரும் பாதையில் ரவுண்டானா அருகே குழி இருக்கிறது. ஆத்துப்பாலத்தில் இருந்து வருவோருக்கு குழி தெரிகிறது. வாகன ஓட்டிகள் விலகி விடுகின்றனர். வாலாங்குளம் ரோட்டில் வருவோர் ரவுண்டானாவை சுற்றி வரும்போது அவர்களின் கண்களுக்கு குழி தெரிவதில்லை. அதில் இறங்கி ஏறும்போது நிலை தடுமாறுகின்றனர். சில நாட்களுக்கு முன் கவுண்டம்பாளையம் மேம்பாலத்தின் இறங்கு தளத்தில் வாகனம் மோதியதில், கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே ஒரு பெண் உயிரிழந்தார். அதன்பின், அவ்விடத்தில் நெடுஞ்சாலைத்துறையால் வேகத்தடை அமைக்கப்பட்டது. அதேபோல், உக்கடம் சந்திப்பிலும் உயிர் பலி ஏற்பட்ட பிறகே பள்ளத்தில் தார் கலவை ஊற்றி, சீரமைப்பார்களா என்று மக்கள் கேட்கின்றனர்.