| ADDED : நவ 24, 2025 06:37 AM
கோவை: துபாய் விமான கண்காட்சியில் நடந்த விமான விபத்தில் பலியான விங் கமாண்டர் நமன் சியாலின் உடலுக்கு சூலுார் விமானப்படைத்தளத்தில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் கடந்த 21ம் நடந்த விமான சாகச நிகழ்ச்சியில் இந்திய விமானப் படை சார்பில், 'தேஜஸ் மார்க் - 1' போர் விமானம் பங்கேற்றது. கோவை சூலுார் விமானப்படைத் தளத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்ட அவ்விமானத்தை விங் கமாண்டர் நமன் சியால் இயக்கினார்.வானில் சாகசத்தை துவக்கிய சில நிமிடங்களிலேயே கட்டுப்பாட்டை இழந்த விமானம் தரையில் மோதி வெடித்து சிதறியது. இதில் விமானி விங் கமாண்டர் நமன் சியால், 37 உயிரிழந்தார்.இந்நிலையில் உயிரிழந்த விங் கமாண்டர் நமன் சியால் உடல், நேற்று முன்தினம் இரவு, 9:30 மணிக்கு கோவை சூலுார் விமானப்படை தளத்துக்கு கொண்டு வரப்பட்டது. நேற்று காலை கோவை கலெக்டர் பவன்குமார், கோவை மாவட்ட எஸ்.பி., கார்த்திகேயன் ஆகியோர் அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அதன் பின் ஹிமாச்சல் பிரதேசம் காங்க்ரா மாவட்டம், பக்வான் தாலுகாவில் உள்ள அவரது சொந்த ஊரான பாட்டியால்காருக்கு எடுத்துச் செல்லப்பட்டது.