மேலும் செய்திகள்
கொசு ஒழிப்பு பணி தீவிரம்
28-Jul-2025
பொள்ளாச்சி; சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சியில் டெங்கு பாதிப்பு ஏற்படாத வகையில், கொசு ஒழிப்பில் களப்பணியாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி, 15 வார்டுகளை உள்ளடக்கியுள்ளது. இங்கு, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். கடந்த சில வாரங்களாக பெய்த மழையால், பேரூராட்சிக்கு உட்பட்ட காலி இடங்களில் செடிகள், முட்புதர்கள் வளர்ந்துள்ளன. இந்நிலையில், மழையால், தண்ணீர் தேங்கும் இடங்கள் கண்டறியப்பட்டு, கொசு ஒழிப்பு பணியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக, ஒவ்வொரு வார்டிலும் கொசு ஒழிப்பு நடவடிக்கையில் துாய்மைப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக, இரு சுகாதார ஆய்வாளர்களின் ஆலோசனைப்படி, 4 மேற்பார்வையாளர்கள், 10 களப்பணியாளர்கள் கொசு ஒழிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். பேரூராட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது: தினமும் காலை முதல் மதியம் வரை, அந்தந்த வார்டுகளில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் பணியாளர்கள் நேரடியாக செல்கின்றனர். வீட்டின் முன்புறம் உள்ள டயர், தேங்காய் சிரட்டை, ஆட்டுக்கல் ஆகியவற்றில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணியில் ஈடுபடுகின்றனர். தண்ணீர் சேமித்து வைக்கப்பட்டுள்ள தொட்டிகளில் டெங்கு கொசுக்கள் வளராத வகையில், 'அபேட்' மருந்து ஊற்றுகின்றனர். கொசு உற்பத்தி ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டு, வீட்டு உரிமையாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். மாலை நேரத்தில் வாகனத்தில் சென்று கொசு ஒழிப்புக்கு புகை மருந்தும் அடிக்கப்படுகிறது. இதனால், ஓரளவுக்கு கொசு கட்டுப்படுகிறது. டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டால் 'மாஸ் கிளீனிங்' செய்யப்படும். இவ்வாறு, கூறினர்.
28-Jul-2025