அரசு மருத்துவமனையில் நேற்று முதல் மெட்டல் டிடக்டர் பரிசோதனை கட்டாயம்
கோவை: கோவை அரசு மருத்துவமனையில், பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்தும் நோக்கில், மெட்டல் டிடக்டர் வாயிலாக நோயாளிகள், உறவினர்களின் பைகள் ஆய்வு செய்யப்பட்ட பின்னர், அனுமதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோவை மட்டுமின்றி, நீலகிரி, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட ஆறு மாவட்டங்களை சேர்ந்த நோயாளிகள், கோவை அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர். நாள் ஒன்றுக்கு, சராசரியாக 7000 முதல் 9000 பேர் வரை உள், புறநோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர். தனியார் ஒப்பந்த அடிப்படையில், 120 பேர் செக்யூரிட்டி இரவு, பகலாக கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இருப்பினும், அவ்வவ்போது எதிர்பாராத சம்பவங்கள் நடக்கின்றன. இதன் காரணமாக, பாதுகாப்பை பலப்படுத்த மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வந்தது. மருத்துவமனை இருப்பிட மருத்துவ அதிகாரி சரவணப்பிரியா கூறுகையில், ''அரசு மருத்துவமனை பாதுகாப்பு காரணங்களுக்காக, மெட்டல் டிடெக்டர் வாயிலாக, இன்று(நேற்று) முதல் பரி சோதனை செய்ய, பாதுகாப்பு பணியாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். தற்போது இரண்டு நுழைவாயில், குழந்தைகள் வார்டு, பிரசவ வார்டு, பிரச்னைகள் உள்ள இடங்களில், ஏழு மெட்டல் டிடெக்டர்கள் பயன்பாட்டில் உள்ளன, '' என்றார்.