முதுமை என்பது முடங்கும் வயதல்ல
மு துமை வந்து விட்டதென முடங்கி விடக்கூடாது. எந்த வயதிலும் சாதிக்க இயலும். தற்போது, சமூகவலை தளங்களில் 50 வயதுக்கு மேல் தொழில் ஆரம்பித்தேன்; சாதித்தேன் என பலர் உள்ளனர். ஆக்கப்பூர்வமான சிந்தனையுடன், வீட்டில் இருந்தே பெரிய முதலீடு இன்றி செய்ய பல தொழில் வாய்ப்புகள் உள்ளது என்கிறார், ராமசாமி சின்னம்மாள் அறக்கட்டளை நிறுவனர் சரஸ்வதி. அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டதாவது: தொழில் என்பது பொருளாதாரத்திற்காக செய்வது, மன அமைதிக்காக செய்வது என இரண்டு பிரிவுகள் உள்ளன. நம் தேவைகளை பொறுத்து, உடல் நிலையை பொறுத்து தேர்வு செய்யுங்கள். பெரிய முதலீடு, இடவசதி வேண்டும் என்றெல்லாம் இல்லை. உணவு சார்ந்த தொழில் வீட்டில் இருந்து, மசாலா பொடிகள் ஆர்டரின் பேரில் செய்து கொடுக்கலாம், வடகம், தாளிப்பு வடகம், பொங்கல் மிக்ஸ், அடை மிக்ஸ், ஊறுகாய் என பலவற்றை தயாரிக்கலாம். முதலீடு ஏதும் தேவையில்லை. வீட்டு சமையலறை பொருட்கள் போதும். ஆர்டர் தருபவர்களிடம் அட்வான்ஸ் வாங்கிக்கொண்டு தயாரிப்பை ஆரம்பத்தில் துவக்கலாம். எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., பதிவு மட்டும் இருந்தால் போதும். டியூசன், கதை சொல்லி பெரிய வருமானம் தேவையில்லை. மன நிறைவு, கொஞ்சம் வருமானம் போதும் என்பவர்கள் வீட்டில் அருகில் உள்ள குழந்தைகளுக்கு டியூசன் சொல்லிக்கொடுக்கலாம். அந்த கால அறிவு சார்ந்த , நீதிக்கதைகளை சொல்லிக்கொடுக்கலாம். எண்ணெய், சோப்பு தயாரிப்பு தலைமுடிக்கான எண்ணெய், சோப்பு போன்றவற்றை எளிதாக வீடுகளில் தயாரிக்க முடியும். தெரியாதவர்கள் பயிற்சி பெற்று பின்னர் துவக்கலாம். தவிர, எளிதாக இயற்கையான முறையில் குளியல் பொடி போன்றவற்றை தயாரித்துக்கொடுக்கலாம். சேனல் துவங்கலாம் சொந்த அனுபவங்களை சமூகவலைத்தள உதவியுடன் சேனல் துவங்கி. சமையல் முதல் சகலமும் பதிவு செய்து புதிய அனுபவத்தையும், வருமானத்தையும் பெறலாம். இ-புக்ஸ் நல்ல எழுத்து வளம் உள்ள முதியோர் கதை, கட்டுரை, கவிதை போன்றவற்றை இ-புக்ஸ் ஆக வடிவமைத்து, ஆன்லைன் வாயிலாக எளிதாக விற்பனை செய்து பணம் ஈட்டலாம். குழந்தை பராமரிப்பு தங்கள் வீடுகள் அருகில், குழந்தைகள் உள்ள தம்பதிகளுக்கு தேவையான நேரங்களில் குழந்தைகளை பராமரிக்க உதவி செய்து, அதன் வாயிலாக சிறிய தொகையை சம்பாதிக்கலாம். இதை பெரிய அளவிலும் தொழிலாக செய்ய இயலும். ஆனால், முதலீடு, உரிமம் போன்றவை தேவைப்படும்.