பனை விதை நடும் பணியை விரைந்து முடிக்க உத்தரவு
கோவை: மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன. அந்த வகையில், குளக்கரை, நீர் நிலைகளை ஒட்டிய பகுதிகளில் மண் அரிப்பு ஏற்படாமல் இருக்க, பனை விதைகள் நடப்படுகின்றன. வெள்ளலுார் உரக்கிடங்கு வளாகத்தில், 55 ஆயிரம் பனை விதைகள் நடும் பணியும் நடந்துவருகிறது. முதற்கட்டமாக, 9,000 பனை விதைகள் நடப்பட்டுள்ளன. விதை நடும் பணிகளை நேற்று பார்வையிட்ட மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், மீதமுள்ள விதைகளையும் விரைந்து நடுமாறு, அலுவலர்களை அறிவுறுத்தினார். தொடர்ந்து, கவுண்டம்பாளையத்தில் ரூ.3.36 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் முதல்வர் படைப்பகம், வடவள்ளி வி.என். நகரில் ரூ.1.48 கோடி மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார நிலையங்கம், புல்லுக்காடு பகுதியில் ரூ.99 லட்சம் மதிப்பீட்டில் நுாலகம் மற்றும் அறிவுசார் மையம் கட்டுமான பணிகளை விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர அறிவுறுத்தினார்.