வால்பாறை, : மக்களுடன் முதல்வர் திட்டத்தில் மக்கள் அதிகளவில் திரண்டு குறைகளை மனுக்கள் வாயிலாக தெரிவித்தனர்.மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ், முதல் கட்டமாக வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட, 1, 2 வார்டுகளுக்கான முகாம் அட்டகட்டியில் நேற்று முன்தினம் நடந்தது. இரண்டாவது கட்டமாக, நேற்று 10 வார்டுகளுக்கான முகாம் நகராட்சி சமுதாய நலக்கூட்டத்தில் நடந்தது.முகாமிற்கு நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி தலைமை வகித்தார். கமிஷனர் பெர்பெற்றிடெரன்ஸ்லியோன், பொறியாளர் வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பொள்ளாச்சி சப்- கலெக்டர் கேத்ரின் சரண்யா முகாமை துவக்கி வைத்தார். முகாமில், பல்வேறு அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டு, மக்களிடம் மனுக்கள் பெற்றனர். வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியை சேர்ந்த மக்கள் அதிகளவில் கலந்து கொண்டனர்.முதியோர் உதவித்தொகை, பட்டா, குடிநீர், ரேஷன் கார்டு, மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்காக மனுக்களை வழங்கினர். முகாமில், கூடுதல் கலெக்டர் நிறைமதி, வால்பாறை தாசில்தார் வாசுதேவன் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு அதிகாரிகள், நகர் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நெகமம்
நெகமம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்தது. முகாமில், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் துவாரகநாத்சிங், நெகமம் பேரூராட்சி தலைவர் ஆர்த்தி, தி.மு.க., கோவை மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சபரி கார்த்திகேயன், பேரூராட்சி செயல் அலுவலர் பத்மலதா மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் பங்கேற்றனர்.முகாமில், 13 துறை அதிகாரிகள் பங்கேற்றனர். 700க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்கள் அளித்தனர்.பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கூறுகையில்,மக்களுடன் முதல்வர் முகாம் தற்போது வரை, 24 இடங்களில் நடந்துள்ளது. இதில், 11,547 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இதற்கான தீர்வு விரைவில் வழங்கப்படும்,' என்றார்.