உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பொள்ளாச்சி, உடுமலை வழித்தடத்தில் ரயில் இயக்க மனசு வைக்கணும்! பல ஆண்டாக நிறைவேறாத கோரிக்கையால் அதிருப்தி

பொள்ளாச்சி, உடுமலை வழித்தடத்தில் ரயில் இயக்க மனசு வைக்கணும்! பல ஆண்டாக நிறைவேறாத கோரிக்கையால் அதிருப்தி

பொள்ளாச்சி : பொள்ளாச்சி - பெங்களூரு எக்ஸ்பிரஸ், மயிலாடுதுறை - தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு வழித்தடங்களில் ரயில்களை இயக்க வேண்டுமென, பொள்ளாச்சி ரயில் பயணியர் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.பாலக்காடு - திண்டுக்கல் அகல ரயில்பாதை பணிகள், கடந்த, 2015ம் ஆண்டும், பொள்ளாச்சி - போத்தனுார் பாதை, 2017ம் ஆண்டும், அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டது. பொள்ளாச்சி - கோவைக்கு காலை மற்றும் மாலை நேரத்திலும், மதுரை - கோவை ரயில், திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.பாலக்காடு - திண்டுக்கல் ரயில் பாதையில், திருச்செந்துார் ரயில், திருவனந்தபுரம் - மதுரை அமிர்தா எக்ஸ்பிரஸ், பாலக்காடு - சென்னை எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், மீட்டர் கேஜ் காலத்தில் இயக்கப்பட்ட ரயில்கள் மீண்டும் இயக்க வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. அதில், மேட்டுப்பாளையம் - துாத்துக்குடி ரயில் பொள்ளாச்சி வழியாக வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும் இயக்கப்படுகிறது.

எப்போது இயங்கும்!

கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலை, பழநி பகுதிகளிலிருந்து பெங்களூருக்கு நேரடி ரயில் இல்லாததால் மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே, கோவை - பெங்களூரு உதய் எக்ஸ்பிரஸ் ரயிலை (22666/22665) பொள்ளாச்சி, பழனி (கிணத்துக்கடவு வழியாக) நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.பாலக்காடு கோட்ட ரயில்வே அதிகாரிகள், உதய் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க தொழில்நுட்பம் குறித்து ஆராய்ந்து சென்றனர். விரைவில் இந்த ரயில் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்னும் அதற்கான நடவடிக்கை இல்லை. இந்த ரயிலை இயக்க அதிகாரிகள் ஏன் தயக்கம் காட்டுகின்றனர் என தெரியவில்லை.

நிறைவேறுமா?

கோவை - தாம்பரம், மயிலாடுதுறை - கோவை தஞ்சாவூர் எக்ஸ்பிரஸ், எர்ணாகுளம் - பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயில், கோவை - ராமேஸ்வரம் உள்ளிட்ட ரயில்கள், பொள்ளாச்சி வழியாக இயக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது.அதே போன்று, பொள்ளாச்சி - மேட்டுப்பாளையத்துக்கு தினசரி ரயில் அல்லது மெமு ரயில் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு, ரயில்வே நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது.பொள்ளாச்சியில் இருந்து, கோவைக்கு காலை, 7:25 மணிக்கு கிளம்பும் ரயில், 75 நிமிடங்களில், அதாவது, 8:40 மணிக்கு சென்றடைகிறது. அதேபோன்று, கோவையில் இருந்து மாலை, 6:40 மணிக்கு கிளம்பும் ரயில், 80 நிமிடங்களில், அதாவது, 8:00 மணிக்கு பொள்ளாச்சிக்கு வருகிறது.அதே நேரத்தில், பொள்ளாச்சி --- போத்தனுார் மின்சார வழித்தடத்தில், கோவையில் இருந்து மதுரைக்கு ரயில் செல்கிறது. கோவையில் இருந்து, 2:40 மணிக்கு கிளம்பும் ரயில், பொள்ளாச்சிக்கு, 48 நிமிடத்தில் அதாவது, மாலை, 3:28 மணிக்கு வருகிறது.இதேபோன்று, பொள்ளாச்சி --- கோவை ரயில் வேகத்தை அதிகப்படுத்த வேண்டும். எனவே, இந்த வழித்தடத்தில், 110 கி.மீ., வேகத்தில் ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நிறைவேற்றப்படாமல் உள்ளது.

அமைச்சரிடம் மனு

பொள்ளாச்சி, கிணத்துக்கடவு ரயில் பயணியர் நலச்சங்கத்தினர் கூறுகையில், 'பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷன், மீட்டர் கேஜ் காலத்தில் பல ரயில்கள் வந்து சென்றதால் பரபரப்பாக காணப்பட்டது. தற்போது, ரயில்கள் விரல்விட்டும் எண்ணும் அளவில் இயக்கப்படுகின்றன.எனவே, பொள்ளாச்சி மக்களின் நீண்ட கால ரயில்வே கோரிக்கைகளை நிறைவேற்றிட மத்திய அமைச்சர் முருகனிடம் மனு கொடுத்து வலியுறுத்தப்பட்டது. தொடர்ந்து, இதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருகிறோம்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Sankaran Natarajan
ஆக 15, 2024 10:18

40க்கு 39 மற்றும் 40க்கு 40 ஆல் ஒரு பயனும் இல்லை. அனைத்திலும் அரசியல் செய்ய முயல்கிற திமுக கூட்டாளிகளுக்கு தமிழகத்து முன்னேற்றத்தை விட தமது அரசியல் லாபமே முக்கியம்.


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை