| ADDED : பிப் 12, 2024 12:50 AM
கோவை;கல்லுாரிகளுக்கு இடையேயான மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில், சிறப்பாக விளையாடிய நான்கு அணிகள், அரையிறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி சார்பில், மாநில அளவில் கல்லுாரிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி, கோவைப்புதுார் ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்ப கல்லுாரி மைதானத்தில் நடக்கிறது. இதன் முதல் காலியிறுதிப்போட்டியில், அரசு தொழில்நுட்ப கல்லுாரி அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை அறிவியல் கல்லுாரி அணியையும், இரண்டாம் காலியிறுதியில் என்.ஜி.பி., கலை அறிவியல் கல்லுாரி அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் கற்பகம் இன்ஜி., கல்லுாரியையும், ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் கே.ஜி., கல்லுாரி அணியையும், சி.எம்.எஸ்., கல்லுாரி அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் எஸ்.என்.எம்.வி., கல்லுாரி அணியையும் வீழ்த்தி, அரையிறுதிக்கு தகுதி பெற்றன. இன்று நடக்கும் அரையிறுதிப்போட்டியில், கிருஷ்ணா கல்லுாரி அணி என்.ஜி.பி., அணியையும், சி.எம்.எஸ்., கல்லுாரி அணி அரசு தொழில்நுட்ப கல்லுாரி அணியையும் எதிர்த்து விளையாடுகின்றன.