குழந்தைகளை ஒப்படைத்த பின்னரே வாகனங்களை இயக்க வேண்டும் வட்டார போக்குவரத்து அலுவலர் அறிவுரை
மேட்டுப்பாளையம்: பள்ளி வாகனங்களில் இருந்து குழந்தைகளை இறக்கி பெற்றோர்களிடம் ஒப்படைத்த பின்புதான், வாகனங்களை இயக்க வேண்டும், என, டிரைவர்களுக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சத்திய குமார் அறிவுரை வழங்கினார்.மேட்டுப்பாளையம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் சார்பில், பள்ளி வாகனங்களை, ஆய்வு செய்யும் பணிகள், நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடந்தது.வருவாய்த்துறை, வட்டாரப் போக்குவரத்து துறை, காவல் துறை, கல்வித்துறை, தீயணைப்பு துறை ஆகிய ஐந்து துறைகள் இணைந்து, பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தனர். வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சத்திய குமார் தலைமை வகித்தார்.மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி., அதியமான், வாகனங்களை ஆய்வு செய்து, டிரைவர்களிடம் வாகனங்களை மெதுவாக ஓட்ட அறிவுறுத்தினார். பின்பு, பள்ளி வாகனங்கள் சரியான முறையில் இயங்குகிறதா, உரிய ஆவணங்கள் பராமரிக்கப்படுகிறதா என, வட்டார போக்குவரத்து அலுவலர் சத்தியகுமார் ஆய்வு செய்தார்.அவர் கூறுகையில், ''டிரைவர்கள், வாகனங்களை மெதுவாக ஓட்ட வேண்டும், வாகனங்களில் இருந்து குழந்தைகளை இறக்கி, பெற்றோரிடம் ஒப்படைத்த பின் மட்டுமே, வாகனத்தை இயக்க வேண்டும், பஸ்சில் உள்ள அனைத்து கேமராக்களும், சரியான முறையில் இயங்க வேண்டும் என, டிரைவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது,'' என்றார்.இந்த ஆய்வில், லோட்டஸ் கண் மருத்துவமனை வாயிலாக, டிரைவர்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. தீயணைப்புத்துறை சார்பில், தீ விபத்தை எப்படி கட்டுப்படுத்துவது, தீயை எவ்வாறு அணைப்பது என்பது குறித்து, தீயணைப்பு அலுவலர் சிவக்குமார் தலைமையில், செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்னக்காமணன் உட்பட, அதிகாரிகள் பங்கேற்றனர்.