| ADDED : ஜன 16, 2024 10:57 PM
பொள்ளாச்சி;பொள்ளாச்சி அருகே, நவமலை ரோடு தோண்டப்பட்டு பணிகள் ஆமை வேகத்தில் நடப்பதால், மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.பொள்ளாச்சி அருகே நவமலை பகுதியில், 38 பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் வசிக்கும் மாணவர்கள் கல்வி பயிலவும், வேலைக்கு செல்வோரும் நவமலை ரோடு வழியாக ஆனைமலை, பொள்ளாச்சி, அங்கலகுறிச்சி, கோட்டூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் சென்று வருகின்றனர்.இந்த ரோடு வழியாக அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. ரோடு மோசமாக இருந்ததால் புதுப்பிக்கும் பணி கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு துவங்கியது. இப்பணிகள் மந்தமாக நடப்பதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.பொதுமக்கள் கூறியதாவது:நவமலை ரோடு சீரமைப்பதற்காக தோண்டப்பட்டும், பணிகள் துவங்கப்படாமல் உள்ளது. பண்டிகை காலம் முடிந்ததும், துவங்கப்படும் என கூறப்படுகிறது. ஒரு மாதத்துக்கும் மேலாக, ரோடு தோண்டப்பட்டும் பணிகள் மேற்கொள்ளாததால் பஸ் இயக்கப்படவில்லை. ரோடு பணியை விரைந்து முடிக்கவும், பஸ்களை இயக்க வேண்டும் என வலியுறுத்தி மறியலில் ஈடுபட திட்டமிட்டோம். அதற்கு வால்பாறை எம்.எல்.ஏ., அமுல்கந்தசாமி பேச்சு நடத்தி பஸ் இயக்க நடவடிக்கை மேற்கொண்டார். தற்போது, பஸ் இயக்கப்படுகிறது.தோண்டப்பட்ட ரோட்டில், வேகமாக செல்ல முடியாமல் சிரமப்படும் நிலை உள்ளது. பணிகள் துவங்காததால், ரோட்டில் செல்ல முடியாத நிலை உள்ளது. இதில் பயணிப்போர் தவறி விழுந்து விபத்துக்குள்ளாகும் அவல நிலை உள்ளது. அவசர சிகிச்சை தேவைப்படுவோர் கூட உடனடியாக செல்ல முடியாத சூழல் உள்ளது.அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும், நடவடிக்கை இல்லை. எனவே, இந்த ரோடு பணிகளை விரைந்து முடித்து, பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.