நிலச்சரிவை தடுக்கும் மண் ஆணி திட்டம் நிறைவு
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலையில் நிலச்சரிவு ஏற்படாமல் தடுக்க, ரூ.4 கோடியில் மண் ஆணி அமைக்கும் திட்டப் பணிகள் நிறைவு பெற்றது. நலச்சரிவு பாதிப்பு இனி ஏற்படாது என மாநில நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.கடந்த 2023ம் ஆண்டு, நவம்பர் மாதம் நீலகிரி மாவட்டத்தில் கன மழை பெய்தது. இதனால், மேட்டுப்பாளையம் - கோத்தகிரி சாலையில், வியூ பாயிண்ட் மற்றும் குஞ்சப்பனை அருகே 3 இடங்களில் நலச்சரிவு ஏற்பட்டது. பாறைகள் உருண்டு, மண் சரிந்து சாலையில் விழுந்தது.இந்த நிலச்சரிவு தொடர்பாகவும், மீண்டும் நிலச்சரிவு ஏற்படாமல் தடுக்கவும் மாநில நெடுஞ்சாலைத்துறையினர் வல்லுநர் குழு வாயிலாக ஆய்வு மேற்கொண்டனர். இக்குழுவின் பரிந்துரை படி தற்போது நிலச்சரிவை தடுக்க ரூ.4 கோடியில் மண் ஆணி அமைக்கும் திட்டம் பணிகள் நடைபெற்றது. தற்போது இந்த பணிகள் 100 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இதுகுறித்து மேட்டுப்பாளையம் உட்கோட்ட மாநில நெடுஞ்சாலை துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-மண் ஆணி அமைத்தல் என்பது, மலையின் செங்குத்தான சரிவில் மண் அரிப்பை தடுத்து, நிலச்சரிவு ஏற்படாமல் இருக்க பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் ஆகும். மண் ஆணி அமைத்து, ஜியோ கிரிட் வழியாக மண்ணின் உறுதித்தன்மையை அதிகரித்து, 'ஹைட்ரோ சீடிங்' முறையில், புல் வளர்க்கப்படுகிறது. 'ஹைட்ரோ சீடிங்' என்பது புல் விதை, உரம் உள்ளிட்டவற்றை நீரில் கலந்து உருவாக்கும் விதைக் கலவையை, உயர் அழுத்த குழாய் வழியாக, செங்குத்தான மலைப் பகுதிகளில் செலுத்துவது ஆகும்.'ஜியோ கிரிட்' எனப்படும், பாலிமர் பொருள்களால் செய்யப்பட்ட இரும்பு பாய்கள் மேல் பகுதியில் பரப்பப்பட்டு, மண் ஆணிகளுடன் இணைக்கப்படும். இது மண் சரிவை தடுக்கிறது. மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலையில் மேட்டுப்பாளையம் உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நிலச்சரிவு, பாறைகள் உருண்டு சாலையில் விழும் பகுதிகள் என 3 இடங்களில் ரூ. 4 கோடியில் மண் ஆணி அமைத்தல் திட்டப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன் இப்பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன. தற்போது 'ஹைட்ரோ சீடிங்' செய்யப்பட்டுள்ளது. அதில் புற்கள் வளர்ப்பு, பராமரிப்பு என அடுத்த 2 மாதங்கள் தொடர் கண்காணிப்பில் ஈடுபடுவோம். இத்திட்டத்தால் நிலச்சரிவு தடுப்பு மற்றும் சுற்று சூழலும் மேம்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.