சிலம்பம், களரி கற்க இலங்கை குழுவினர் ஆர்வம்
மேட்டுப்பாளையம் : 83 வயதிலும் சிலம்பம், களரி உள்ளிட்ட தற்காப்பு கலைகளை மாணவர்களுக்கு இலவசமாக கற்றுத் தருகிறார் சந்திரன் ஆசான். இவரிடம் இலங்கையை சேர்ந்த குழுவினர், சிலம்பம் கற்றுக்கொள்ள ஆர்வமாக உள்ளனர்.கோவை மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள பெருமாள் கோவில் வீதியை சேர்ந்தவர் சந்திரன் ஆசான். 83, வயதான இவர், 11 வயது முதல் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் அதன் உட்பிரிவுகளான குருவடி, கைப்போர், வாள், ஈட்டி, கேடயம், குஸ்தி என பல வகையான கலைகளை கற்றுக் கொண்டார்.தமிழர்களின் பாரம்பரிய கலைகள் அழிந்து விடக்கூடாது, என்பதற்காக சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக மாணவ, மாணவிகளுக்கு இந்த பயிற்சிகளை இலவசமாக கற்றுக் கொடுக்கிறார். இவரிடம் பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகள் பல்வேறு மாவட்டம், மாநிலம், தேசிய, சர்வதேச அளவில் சிலம்பாட்ட போட்டிகளில் கலந்துகொண்டு, பதக்கங்களை வென்றுள்ளனர்.இவரின் சேவையை பாராட்டி தமிழக அரசு கடந்த 2016ம் ஆண்டு, 'கலை முதுமணி' விருது வழங்கியுள்ளது. அதேபோல் கோவை சிலம்பம் சங்கம் சார்பாக சிறந்த ஆசான் விருதும், லயன்ஸ் கிளப் அமைப்பு சார்பாக 'வாழ்நாள் சாதனையாளர்' விருதும் வழங்கப்பட்டுள்ளது.இவரின் திறமையை பார்த்து தற்போது இலங்கையில் இருந்து வந்த குழுவினர், இவரை நேரில் சந்தித்து சிலம்பம் பயிற்சி பெற்று வருகின்றனர்.இதுகுறித்து ஆசான் சந்திரன் கூறுகையில், ''சிலம்பாட்ட பயிற்சி பெறும் மாணவர்கள், நல்லொழுக்கம், உடல் மற்றும் மன வலிமை பெற்று, எந்த சூழ்நிலையிலும் தெளிவான சிந்தனை யுடன் முடிவு எடுக்கக் கூடியவர்களாக திகழ்வார்கள். பெண்களுக்கான குற்றங்கள் நடக்கும் சூழ்நிலையில், பெண்களுக்கு தற்காப்பு கலைகள் மிகவும் அவசியம். சிலம்பம் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது.'' என்றார்.இலங்கையில் இருந்து வந்த அஜந்தா மகந்தா என்பவர் கூறுகையில், ''இலங்கையில் இது போன்ற பாரம்பரிய கலைகள் குறித்து ஆராய்ந்து வருகிறோம். ஆசான் சந்திரனின் சிலம்பம் வீடியோவை யூ டியூப்பில் பார்த்தேன். அதன் வாயிலாக அவரை அணுகி இங்கு வந்தேன். தற்போது அவரிடம் சிலம்பம் கற்றுக் கொள்ள ஆர்வமாக உள்ளேன்'' என்றார்.