உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நான்கு வழிச்சாலை பணி வேகமில்லை; தடுமாறும் வாகன ஓட்டுநர்கள்!

நான்கு வழிச்சாலை பணி வேகமில்லை; தடுமாறும் வாகன ஓட்டுநர்கள்!

பணியை விரைவுபடுத்துங்க

உடுமலை -- தாராபுரம் ரோட்டில், நான்கு வழிச்சாலைக்காக ரோடு அமைக்கும் பணி மெதுவாக நடக்கிறது. இதனால், வாகனங்கள் வேகமாக செல்வதில் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, இப்பணிகளை விரைவுபடுத்த நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- கார்த்திக், உடுமலை.

போதிய இடவசதியில்லை

உடுமலை பஸ் ஸ்டாண்டில், ஆனைமலை பஸ்கள் நிற்கும் பகுதியில், போதிய இடவசதியில்லாததால், பயணியர் பாதிக்கின்றனர். நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ராமகிருஷ்ணன், உடுமலை.

தானியங்கி சிக்னல் தேவை

உடுமலை ஏரிப்பாளையம் ரோடு சந்திப்பில் சிக்னல் இல்லாததால், போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. போக்குவரத்து போலீசார் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.- சம்பத்குமார், உடுமலை.

போக்குவரத்து நெரிசல்

உடுமலை தளி ரோடு நுாலகம் பஸ் ஸ்டாப் பகுதியில், பஸ்களை நிறுத்த இடவசதியில்லை. இதனால், காலை, மாலை நேரங்களில், அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதுகுறித்து நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- கணேசமூர்த்தி, உடுமலை.

பாதியில் நிற்கும் பணி

உடுமலை நகராட்சி சந்தை வளாகத்தில், புதிதாக கடைகள் கட்டும் பணி நடந்து வருகிது. ஆனால், இப்பணி முடிவடையாமல் பாதியிலேயே நிற்கிறது. இதனால், சந்தையில் பொதுமக்கள், வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, இப்பணியை விரைந்து முடிக்க நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- காளிமுத்து, உடுமலை.

ஆக்கிரமிப்பு அதிகரிப்பு

உடுமலை உழவர் சந்தை ரோட்டில் இருபுறங்களிலும், தற்காலிக ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்காததால், மக்கள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர்.- சரவணகுமார், உடுமலை.

விபத்து அபாயம்

பொள்ளாச்சி, மார்க்கெட் ரோட்டில், நேதாஜி ரோடு சந்திப்பு பகுதியில், போக்குவரத்தில் சிறிய மாற்றம் ஏற்படுத்தி, வாகனங்கள் 'யு டேர்ன்' செய்யும் இடம் மாற்றிமைக்கப்பட்டுள்ளது. ஆனால், பெரும்பாலான வாகன ஓட்டுநர்கள், 'ஒன்வே'யில் சென்று, வாகனங்களை திருப்புவதால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. போக்குவரத்து போலீசார் கவனம் செலுத்தி, விதிமீறும் வாகன ஓட்டுநர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.- முரளி, பொள்ளாச்சி.

அறிவிப்பு இல்லை

பொள்ளாச்சி, மீன்கரை ரோட்டில், திவான்சாபுதுார் ரயில்வே கேட் அருகில், மணக்கடவு செல்வதற்கு முறையான அறிவிப்பு வைக்கவில்லை. மேலும், அப்பகுதியில் ரோட்டில் மையத்தடுப்பு அமைத்திருந்தாலும், போலீசார் தடுப்பு அமைத்து, ஒரு வழிப்பாதையை மறித்துள்ளனர். இதனால், வாகன ஓட்டுநர்களுக்கு குழப்பம் ஏற்படுகிறது.- ஆனந்த், மீனாட்சிபுரம்.

போக்குவரத்து விதிமீறல்

பொள்ளாச்சி, புது பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள ரோட்டில், போக்குவரத்து விதிமீறி, ஆபத்தை உணராமல் சரக்கு வாகனத்தில் உள்ள மூட்டைகள் மீது அமர்ந்து செல்கின்றனர். இதனால், விபத்து ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே, போக்குவரத்து போலீசார் இதை கவனித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.- டேவிட், பொள்ளாச்சி.

பள்ளி அருகே குப்பை

பனப்பட்டி அரசு பள்ளி சுவற்றின் வெளிப்புறத்தில் அதிகளவு செடிகள் முளைத்து உள்ளது. ஆங்காங்கே பிளாஸ்டிக் குப்பை குவிந்து கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே, இப்பகுதியை ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில், சுத்தப்படுத்தி பராமரிக்க வேண்டும்.- ராஜ், நெகமம்.

மின்விளக்கு அமைக்கணும்

கிணத்துக்கடவு, மயானம் வழியாக இம்மிடிபாளையம், கோதவாடி மற்றும் தேவராடிபாளையம் ஆகிய ஊர்களுக்கு செல்லும் இணைப்பு ரோட்டில், இரவு நேரத்தில் வெளிச்சம் இல்லாததால் மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே, வாகன ஓட்டுனர்கள் நலன் கருதி இங்கு மின்விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும்.-- கண்ணன், கிணத்துக்கடவு.

ரோட்டில் பள்ளம்

கிணத்துக்கடவு சர்வீஸ் ரோட்டில் இருந்து பகவதிபாளையம் செல்லும் வழியில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதில், தண்ணீர் தேங்கி இருப்பதால் வாகன ஓட்டுநர்கள் நிலை தடுமாறி கீழே விழுகின்றனர். எனவே, இந்த ரோட்டை விரைவில் சீரமைக்க வேண்டும்.- மணிகண்டன், கிணத்துக்கடவு.

பெயர் பலகையை சீரமைக்கணும்!

கிணத்துக்கடவு, செங்குட்டைபாளையம் பகுதியில் உள்ள, ஊர் பெயர் பலகையில், சில எழுத்துக்கள் இல்லாமல் உள்ளது. இதன் அருகே உள்ள மரக்கிளை இந்த பலகையை மறைத்த படி உள்ளது. எனவே, இந்த மரக்கிளையை அகற்றி, பெயர் பலகையில் உள்ள எழுத்துக்களை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- -- சதீஷ், நெகமம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ