டிபாசிட் மீதான வட்டி விகிதம் இணையதளத்தில் மாற்றவில்லை
கோவை; கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில், வைப்புகள் மீதான வட்டி விகிதம் மாற்றியமைக்கப்பட்டுள்ள நிலையில், இணையதளத்தில் மாற்றப்படாதது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்களின் நிதித் தேவைகளை பூர்த்தி செய்வதில், கூட்டுறவு வங்கிகள் முக்கிய இடம் பிடிக்கின்றன. கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில், வங்கியின் சொத்து பொறுப்பு குழுவில் தீர்மானிக்கப்பட்ட பரிந்துரை அடிப்படையில், வைப்புகள் மீதான வட்டி விகிதம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதன்படி, வைப்புத் தொகை, ஏழு முதல் 14 நாட்களுக்கு, தனிநபர், மூத்த குடிமக்கள், கூட்டுறவு துறை நிறுவனங்கள், தனியார் மற்றும் அரசுத் துறை நிறுவனங்களுக்கு, 3.50 சதவீதம், 15 முதல் 45 நாட்களுக்கு 3.75 சதவீதம் வழங்கப்படுகிறது. ஜூலை 2 முதல், மாற்றியமைக்கப்பட்ட வட்டி விகிதமாக, 46 முதல் 90 நாட்களுக்கு 5 சதவீதம், 91 முதல் 180 நாட்களுக்கு 5.50 சதவீதம், 181 முதல் 364 நாட்களுக்கு, தனி நபர் மற்றும் கூட்டுறவு துறை நிறுவனங்கள், தனியார் மற்றும் அரசுத் துறை நிறுவனங்களுக்கு 6 சதவீதம் வழங்கப்படுகிறது. ஓராண்டுக்கு மேல், தனி நபர் மற்றும் கூட்டுறவு துறை நிறுவனங்கள், தனியார் மற்றும் அரசுத் துறை நிறுவனங்களுக்கு 7.50 சதவீதம், மூத்த குடிமக்களுக்கு 7.75 சதவீதம் வழங்கப்படுகிறது. இதை இணையத்தில் மாற்ற அறிவுறுத்தப்பட்டிருந்தும், இதுவரை மாற்றவில்லை. ஒரு மாதத்துக்கு மேலாகியும் இதுகுறித்து கண்டுகொள்ளாமல் இருப்பது, அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.