1. சாலைக்கு 10 குதிரைகள்
கோவைப்புதுார், 90வது வார்டு, 'என்' பிளாக், பாரதி நகர் விரிவாக்கம் மற்றும் பல்வேறு பகுதிகளில், தெருக்களில் பத்துக்கும் மேற்பட்ட குதிரைகள் சுற்றித்திரிகின்றன. வாகனங்களில் செல்பவர்களுக்கு இடையூறாக உள்ளது. திடீரென குறுக்கே ஓடும் குதிரைகளால் விபத்து நடக்கிறது. முதியவர்கள், குழந்தைகள் சாலையில் நடந்து செல்லவே அஞ்சுகின்றனர். - தங்கவேல், கோவைப்புதுார். 2. இருளில் மிரட்டும் நாய்கள்
போத்தனுார், 99வது வார்டு, மேட்டுத் தோட்டம், காந்தி நகரில், ' எஸ்.பி -32, பி -9' என்ற எண் கொண்ட கம்பத்தில், பல மாதங்களாக தெருவிளக்கு எரியவில்லை. தெருநாய்கள் தொல்லையும் அதிகமாக இருப்பதால், இரவு நேரங்களில் சாலையில் நடக்கவே முடியவில்லை.- சியாமளா, போத்தனுார். 3. சீக்கிரம் சீரமைக்கணும்
மதுக்கரை மார்க்கெட் ரோடு, மோகன் நகரில் குடிநீர் குழாய் சீரமைப்பு பணிக்காக குழி தோண்டப்பட்டது. பணிகள் ஆமை வேகத்தில் நடக்கின்றன. பத்து நாட்களுக்கு மேலாகியும், குழியை மூடவில்லை. சாலையை பயன்படுத்த முடியாமல், குடியிருப்புவாசிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.- பார்த்தசாரதி, மதுக்கரை மார்க்கெட். 4. சாக்கடையில் மரக்கிளைகள்
பாப்பநாயக்கன்பாளையம், பாரதியார் ரோட்டில், மின்ஒயர்களில் உரசும் கிளைகளை, மின்வாரிய பணியாளர்கள் வெட்டி அகற்றினர். ஆனால், மரக்கிளைகளை முறையாக அகற்றவில்லை. சாலையிலும், சாக்கடை கால்வாயிலும் மரக்கிளைகள் பல நாட்களாக கிடக்கின்றன.- சாந்தக்குமார், பாப்பநாயக்கன்பாளையம். 5. சேறும், சகதியுமான ரோடு
வடவள்ளி, 38வது வார்டு, குருசாமி நகர், 7வது கிராஸ் ரோட்டில், தெற்கு சப்கிராஸ் ரோட்டில், பல வருடங்களாக வலியுறுத்தியும், தார் சாலை அமைக்கவில்லை. மழைக்காலத்தில் சேறும், சகதியுமாக இருக்கும் சாலையில், நடக்கவும், வாகனங்கள் செல்லவும் சிரமமாக உள்ளது. - விஜயா, குருசாமிநகர். 6. குழியில் விழுகின்றனர்
ராமநாதபுரம், 64வது வார்டு, ஜெம் மருத்துவமனை எதிரே, சடையப்பன் வீதியில், சாலையோரத்தில் ஆழ்குழாய் கிணறு அமைந்துள்ளது. இதன், மோட்டார் பழுதை சரிசெய்வதற்காக சிலேப் அகற்றப்பட்டது. ஒரு மாதத்திற்கு மேலாகியும் மூடவில்லை. இரவில் தெருவிளக்குகளும் எரியாததால், பலர் குழியில் விழுந்து விபத்திற்குள்ளாகின்றனர்.- பாஸ்கர், ராமநாதபுரம். 7. சேற்றில் மாட்டும் வாகனங்கள்
கோவை மாநகராட்சி, 88வது வார்டு, கோசல் நகரில் இதுவரை தார் ரோடு அமைக்கவில்லை. மண் சாலையில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. வாகனங்கள் செல்லும்போது சக்கரங்கள் சேற்றில் சிக்கிக்கொள்கின்றன. - அருள்ராஜ், கோசல்நகர். 8. பூட்டிக்கிடக்கும் பாலுாட்டும் அறை
காந்திபுரம் பேருந்து நிலையத்தில், தாய்மார்கள் பாலுாட்டும் அறை போதிய பராமரிப்பின்றி, பல மாதங்களாக பூட்டி கிடக்கிறது. சீரமைத்து, மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால், தாய்மார்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். - நடராஜன், காந்திபுரம். 9. குறுகலான சாலையில் நெருக்கடி
மதுக்கரை ரோடு, குரும்பபாளையம் ரயில்வே பாலம் மிகவும் குறுகலாக இருப்பதால், காலை, மாலை வேளையில் பெரும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. பாலத்திற்கு கீழே சாலை முழுவதும் குழிகளாக உள்ளது. தண்ணீர் தேங்கி நிற்பதால், குழி தெரியாமல் வாகன ஓட்டிகள் தடுமாறி விழுகின்றனர்.- கோபி, குரும்பபாளையம். 10. சீரமைக்காத ரோட்டால் விபத்து
கவுண்டம்பாளையம், ஸ்ரீதேவி நகர், நான்காவது வீதியில், பி அண்ட் டி காலனி முதல் கிரி நகர் செல்லும் வழியில், குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளுக்காக, சாலை தோண்டப்பட்டது. பணிகள் முடிந்த பின் மண்ணை முழுமையாக அகற்றி, சாலையை சீரமைக்கவில்லை. சேதமடைந்த சாலையால் மழைக்காலத்தில் விபத்து நடக்கிறது.- கமல், ஸ்ரீதேவி நகர். 11. வீணாகும் குடிநீர்
சாஸ்திரி ரோடு, கே.கே.பேக்ஸ் எதிரே சிறுவாணி குடிநீர் குழாய் உடைந்து, பெருமளவு தண்ணீர் வீணாகிறது. தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதால், குழாய் உடைப்பை விரைந்து சரிசெய்ய வேண்டும்.- குருசாமி, சாஸ்திரி ரோடு. 12. சாலை முழுவதும் பள்ளங்கள்
காளப்பட்டி ரோடு, நேரு நகர் கிழக்கு, வி.வி.சி., நகர், ஹவுசிங் யூனிட் ரோடு மிகவும் மோசமாக சேதமடைந்துள்ளது. ரோடு முழுவதும் பெரும் பள்ளங்களாக உள்ளது. - பழனிச்சாமி, நேரு நகர்.