மேட்டுப்பாளையம்:வீட்டில் இருந்த நபரிடம், கத்தியை காட்டி மிரட்டி, பணம் பறித்த மூவருக்கு, சார்பு நீதிமன்றத்தில், மூன்றாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.காரமடை அடுத்த தாயனுாரை சேர்ந்தவர் சுந்தரம், 65. இவர், 2013ம் ஆண்டு, ஆக., 9ம் தேதி வீட்டில் இருந்தபோது, காளம்பாளையத்தைச் சேர்ந்த சாம்ராஜ், 46, பழனிசாமி, 37, சதீஷ்குமார், 39 ஆகிய மூவரும், சுந்தரம் வீட்டில் புகுந்து, கழுத்தில் கத்தியை வைத்து, சத்தம் போட்டால் கொன்று விடுவேன் என மிரட்டியுள்ளனர். மேலும் அவரிடம் இருந்து, 4,000 ரூபாயையும், மொபைல் போன் ஒன்றையும் பறித்துச் சென்றனர்.இது சம்பந்தமாக காரமடை போலீசார் மூவரையும் கைது செய்தனர்.இந்த வழக்கு மேட்டுப்பாளையம் சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நீதிபதி கெங்கராஜ், கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்ட சாம்ராஜ், பழனிசாமி, சதீஷ்குமார் ஆகிய மூவருக்கும் தலா மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார்.அபராதம் செலுத்த தவறும் பட்சத்தில், மேலும் இரண்டு வாரம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் சிவசுரேஸ் ஆஜரானார்.