ஆறாக ஓடும் கழிவு நீர்; மில் ரோட்டில் அவதி: நகராமல் இருக்கும் நகராட்சி நிர்வாகம்
சோமனுார்; சோமனுார் மில் ரோட்டில் தேங்கிய கழிவு நீரால் மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். கருமத்தம்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட சோமனூரில், பஸ் ஸ்டாண்ட், பத்திரப்பதிவு அலுவலகம், சந்தை பேட்டை, நகராட்சி வணிக வளாகம், சோமனூர் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்டவை, சோமனூர் - - கருமத்தம்பட்டி ரோடு மற்றும் மில் ரோட்டில் உள்ளன. அதனால், இந்த ரோடுகளில், எந்நேரமும், மக்கள் நடமாட்டமும், வாகன போக்குவரத்தும் அதிகம் இருக்கும். இந்நிலையில், மில் ரோட்டில் உள்ள சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டதால், அந்த ரோட்டில் கழிவு நீர் குளம் போல் தேங்கியது. இதனால், மக்கள் அவதிக்குள்ளாகினர். அப்பகுதி மக்கள் கூறியதாவது: சோமனூரில் உள்ள மில் ரோட்டில் கழிவு நீர் நேற்று தேங்கியது. ரோட்டில் நடக்க கூட முடியவில்லை. இந்த ரோட்டில் உள்ள சாக்கடை கால்வாய் தூர்வாரி பல மாதங்கள் ஆகிவிட்டன. மண், கழிவுகள் அடைத்து கொண்டதால், கழிவு நீர் ரோட்டுக்கு வந்து தேங்கியுள்ளது. கடும் துர்நாற்றம் வீசுகிறது. வாகனங்களை இயக்க முடியவில்லை. அடிக்கடி இதுபோன்ற நடப்பதால், மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். நகராட்சி நிர்வாகம், சாக்கடை கால்வாயை தூர் வாரி, கழிவு நீர் தடையின்றி வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.