தர்மத்தை பிரசாரம் செய்யும் கடமை நமக்கு இருக்கிறது
கோவை: கோவை காமாட்சிபுரி ஆதினம், 51 சக்தி பீடத்தில், சமுதாய நல்லிணக்கப் பேரவை(கோவை மாவட்டம்) சார்பில், துறவியர் கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், திருவாரூர், காரைக்குடி, மதுரை, திருமூர்த்திமலை என, 10க்கும் மேற்பட்ட பகுதிகளை சேர்ந்த மடாதிபதிகள், துறவிகள் பங்கேற்றனர்.பேரவையின் அகில பாரத அமைப்பாளர் ஷியாம் பிரசாத் சிறப்புரை ஆற்றியதாவது:நமது நாடு சில பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறது. இச்சூழலில், நாம் தர்மத்தை மக்களிடம் போதித்து, பிரசாரம் செய்ய வேண்டும். ராமாயணம், மகாபாரதம் பற்றி இன்றைய தலைமுறையினருக்கு தெரிவதில்லை. பள்ளிகளிலும் இதுகுறித்து பயிற்றுவிக்கப்படுவதில்லை. பெற்றோருக்கும் தெரிவதில்லை. எனவே, பழமையான விஷயங்களை இளம் தலைமுறையினருக்கு சொல்லிக் கொடுக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது.இவ்வாறு, அவர் பேசினார்.காமாட்சிபுரி ஆதினம் பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள் உட்பட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து, ஆன்மிகத்தை மக்களிடம் கொண்டு செல்லவும், அன்பும், அறனும் விதைக்கும் விதமாகவும் கலந்துரையாடினர்.