| ADDED : ஜன 20, 2024 02:37 AM
அடுக்குமாடி குடியிருப்புகள் வெகுவாக அதிகரித்தாலும், தனி வீடு வாங்குவதில் மக்களிடம் ஆர்வம் குறையவில்லை. எனக்கென்று ஒரு நிலம், அதில் வீடு, தோட்டம் என வாழ விரும்பாதவர்கள் இருக்க முடியாது.இதில், நகர்ப்புற பகுதிகளில் நிலம் பற்றாக்குறை, விலை ஏற்றம் போன்ற காரணங்களால் அடுக்குமாடி வீடுகள் வாங்குவது தவிர்க்க முடியாததாக உள்ளது. இருந்தாலும், எப்படியாவது தனி வீடு வாங்க மாட்டோமா என்று பலரும் ஏங்குகின்றனர்.இந்த ஏக்கத்தை பூர்த்தி செய்யும் வகையில், தனி வீடு வாங்குவோர், ஆவண ரீதியாக கூடுதல் விஷயங்களை விசாரிக்க வேண்டும். பத்திரம் அனைத்தும் சரியாக இருந்தாலும் வில்லங்கள் எதுவும் இல்லை என்ற முடிவுக்கு வந்து விடாதீர்கள்.நீங்கள் வாங்கும் வீட்டின் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் யார் என்பதை, விற்பனைக்கு முன்னே சரி பாருங்கள். குறிப்பாக, வீட்டை உங்களுக்கு விற்பவர் யார்? அவருக்கும், அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுக்கு இடையிலான சூழல் என்ன என்பதை அறிவது அவசியம்.சில இடங்களில் அக்கம் பக்கத்தில் யாரும் இருக்கக் கூடாது என்பதற்காக தேவையில்லாமல் பிரச்னை செய்யும் நபர்கள் இருந்தால், அது அங்கு அமைதியை கெடுத்து விடும். நிம்மதியாக குடியிருக்கலாம் என்ற உங்கள் எண்ணத்தை சிதைத்து விடும்.விற்பவரிடம் அக்கம் பக்கத்தில் இருப்பவர் குறித்து விசாரிப்பதுடன், இவர்கள் இருவரையும் தவிர்த்து மூன்றாவது நபரையும் விசாரித்தால் உண்மை நிலவரம் தெரியவரும். அக்கம் பக்கத்தில் வில்லங்க நபர்கள் இருப்பதால் தான், அந்த வீடு விற்பனைக்கே வருகிறது என்றால், அதில் நீங்கள் அலர்ட் ஆவது நல்லது.மிக மோசமாக நடந்து கொள்ளும் நபர்கள் இருந்தால், அவர்கள் அருகில் வீடு வாங்கி குடியிருப்பது பிரச்னையை நாமே தலையில் போட்டு கொள்வதற்கு சமம். இது போன்ற விஷயங்களை பலரும் கவனிக்க தவறுகின்றனர்.சொந்தமாக தனி வீடு வாங்க வேண்டும் என்று ஆசைப்பட அனைவருக்கும் உரிமை உள்ளது. ஆனால், அதில் மிக கவனமாக இருந்தால் தான் நிம்மதியாக வசிக்க முடியும். எனவே, அக்கம் பக்கத்து மனிதர்களின் சூழல் குறித்து முறையாக ஆராய்ந்து, அதன் அடிப்படையில் வீடு வாங்குவது நல்லது என்கின்றனர், கட்டுமானத்துறை வல்லுனர்கள்.