வால்பாறையில் பரவலாக மழை; சோலையார் நீர்மட்டம் சரிவு
வால்பாறை; பரவலாக பெய்து வரும் மழையினால், சுற்றுலாபயணியர் நீர்வீழ்ச்சியில் குளிக்க வனத்துறையினர் தொடர்ந்து தடை விதித்துள்ளனர்.வால்பாறையில், கடந்த இரண்டு மாதங்களாக தென்மேற்குப்பருவ மழை தொடர்ந்து பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக மழைப்பொழிவு குறைந்த நிலையில் சாரல்மழை மட்டுமே பெய்து வருகிறது.இதனால் அணைகளின் நீர்மட்டமும் சரிந்து வருகிறது. இதனிடையே, வால்பாறையில் பரவலாக மழை பெய்து வருவதால், சுற்றுலாபயணியர் நீர்பிடிப்பு பகுதிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.இதனால் சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. மழைப்பொழிவு குறைந்த நிலையில், சோலையாறு அணையின்நீர்மட்டம் நேற்று காலை, 158.35 அடியாக சரிந்தது.அணைக்கு வினாடிக்கு, 1,163 கன அடி தண்ணீர் வரத்தாக உள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு, 1,504 கன அடி தண்ணீர் வீதம் பரம்பிக்குளம் அணைக்கு திறந்துவிடப்படுகிறது.இதனால் இந்த அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 64.80 அடியாக உயர்ந்தது. இதேபோல் ஆழியாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 118.65 அடியாக உயர்ந்தது. அதிகபட்சமாக மேல்நீராறில், 17 மி.மீ., மழை பெய்துள்ளது.