வால்பாறை: வால்பாறை மலைப்பாதையில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுவதால், சுற்றுலா பயணியர் தங்களது வாகனங்களை கவனமாக இயக்க வேண்டும், என, வனத்துறை அறிவுறுத்தியுள்ளது. ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய இரண்டு வனச்சரகங்களிலும் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளன. குறிப்பாக, யானை, சிறுத்தை, வரையாடு, சிங்கவால்குரங்குகள், காட்டுமாடு, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இந்நிலையில், வால்பாறையிலிருந்து பொள்ளாச்சி செல்லும் மலைப்பாதையில், சமீப காலமாக யானை, சிறுத்தை, கரடி உள்ளிட்ட வன விலங்குகள் இரவு நேரத்தில் உலா வருகின்றன. ஐயர்பாடி அருகே ரோட்டோரத்தில் கரடி சென்றதை கண்டு மக்கள் பீதியடைந்துள்ளனர். வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: வால்பாறை மலைப்பகுதியில் வனவிலங்குகளுக்கு தேவையான உணவு, குடிநீர் போதுமான அளவு கிடைக்கிறது. வால்பாறை - பொள்ளாச்சி ரோட்டில், வரையாடுகள், சிங்கவால் குரங்குகள், யானை, காட்டுமாடு, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் அதிக அளவில் நடமாடுவதால், இந்தப்பகுதியில் சுற்றுலா பயணியர் தங்களது வாகனங்களை அதிவேகமாக இயக்குவதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக, இரவு நேரத்தில் மலைப்பாதையில் வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளதால், சுற்றுலா பயணியர் தங்களது வாகனங்களை மிகவும் கவனமாக இயக்க வேண்டும். வழியில் தென்படும் வனவிலங்குகளை துன்புறுத்தும் வகையில் செல்பி, போட்டோ எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. மீறினால் வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, கூறினர்.