உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  சுய உதவி குழுக்களுக்கு மகளிர் திட்டம் அழைப்பு

 சுய உதவி குழுக்களுக்கு மகளிர் திட்டம் அழைப்பு

அன்னுார்: சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு மகளிர் திட்டம் அழைப்பு விடுத்துள்ளது. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், மகளிர் திட்டமும், திருப்பூர் நிப்டி நிறுவனமும் இணைந்து ஆடை உற்பத்தியாளர் நிறுவனங்களின் தொழில் தொகுப்பு உருவாக்கி வருகின்றன. இதன் சார்பில் ஆலோசனைக் கூட்டம் அன்னுாரில் மகளிர் திட்ட அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட உதவி திட்ட அலுவலர் அசோகன் தலைமை வகித்தார். இதில் மகளிர் திட்ட வட்டார மேலாளர் கந்தசாமி பேசியதாவது : இத்திட்டத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கரூர், சேலம், நாமக்கல், திண்டுக்கல் ஆகிய எட்டு மாவட்டங்கள் அடங்கிய மண்டலத்திற்கு திருப்பூர் மையமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் ஆயிரம் ரூபாய் பங்குத்தொகை செலுத்தி புதிதாக உருவாகும் ஆடை உற்பத்தியாளர் நிறுவனத்தில் பங்குதாரராக இணைந்து கொள்ள வேண்டும். இதையடுத்து குறைந்த வட்டியில் தையல் மெஷின் வாங்க கடன் வழங்கப்படும். அதிகபட்சம் 2 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும். மேலும் தையலுக்கு ஜாப் ஆர்டர் திருப்பூரில் இருந்து நிப்டி அமைப்பு மூலம் ஏற்பாடு செய்து தரப்படும். செய்யப்படும் பணிகளுக்கு உடனுக்குடன் வங்கி கணக்கில் பணம் வழங்கப்படும். மேலும் தையல் பயிற்சி அளிக்கப்படும். மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு 99407 08581 என்னும் மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் நிப்டி அதிகாரிகள், உற்பத்தியாளர் நிறுவனத்தின் மண்டல தலைவர் நித்யா மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி