| ADDED : ஜூன் 15, 2024 04:58 AM
கடலுார்: கடலுாரில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.20 கோடி மோசடி செய்த தாய் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். கடலுார், மஞ்சக்குப்பத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன் மனைவி சுஜாதா, 45; உப்பலவாடி சாலையில் பியூட்டி பார்லர் நடத்தி வந்தார். இவருக்கு ஆல்பேட்டையைச் சேர்ந்த மனோகர் மனைவி சுமதியுடன் பழக்கம் ஏற்பட்டது. சுமதி 10 ஆண்டுகளாக ஏலச்சீட்டு மற்றும் தீபாவளி பண்ட் சீட்டு நடத்தி வருவதாகவும், இதில் சேருமாறு கூறினார்.அதனை நம்பி சுஜாதா உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கடந்த 2022ம் ஆண்டு ரூ.5 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை சீட்டு மற்றும் தீபாவளி பண்ட் கட்டினர். சீட்டு கட்டியவர்களுக்கு ரூ.20 கோடி வரை பணத்தை தராமல் காலம் கடத்தி வந்த சுமதி குடும்பத்துடன் தலைமறைவானார்.இதுகுறித்த புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து சுமதி மற்றும் குடும்பத்தினரை தேடி வந்தனர். அதில் கிடைத் தகவலின் பேரில் சென்னை மெரினா கடற்கரையில் நின்றிருந்த சுமதி, 54; மகன் சுகன்,36; மகள் சுஜிதா,36; ஆகியோரை நேற்று கைது செய்தனர்.