| ADDED : ஜூலை 18, 2024 08:35 AM
நெல்லிக்குப்பம், : நெல்லிக்குப்பம் அடுத்த காராமணிக்குப்பத்தை சேர்ந்தவர் இளவேனில் வாலறிவன். துப்பாக்கி சுடும் போட்டியில் உலக அளவில் சாதனை படைத்து பல்வேறு பதக்கங்களை குவித்துள்ளார். விளையாட்டு துறையில் சாதித்ததற்காக, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு, மத்திய அரசின் அர்ஜூனா விருது பெற்றார். பாரீஸில் இம்மாதம் நடக்க உள்ள ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதல் பிரிவில் கலந்து கொள்ள இளவேனில் தேர்வாகி, அதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.மகளின் லட்சியம் குறித்து, இளவேனில் தந்தை வாலறிவன் கூறுகையில், நானும் எனது மனைவி சரோஜாவும் குஜராத்தில் பணிபுரிந்தோம். நான் ஓய்வு பெற்று தற்போது கடலூரில் பணியாற்றுகிறேன். எனது மனைவி குஜராத்தில் கல்லூரி பேராசிரியராக உள்ளார்.எனது மகன் இறைவன், ராணுவத்தில் பணிபுரிகிறார். அவர் துப்பாக்கி சுடும் பயிற்சி செய்ததை பார்த்த எனது மகள் இளவேனிலுக்கு, துப்பாக்கி சுடுதலில் ஆர்வம் வந்து பயிற்சி பெற்றார். இதுவரை உலகளவில் நடந்த பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு துப்பாக்கி சுடுதலில் 20கும் மேற்பட்ட பதக்கங்களை பெற்றுள்ளார்.ஜப்பானில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று, வெற்றி வாய்ப்பை இழந்தார். தற்போது நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு தங்கம் வெல்வதே எனது மகளின் லட்சியமாகும் என, தெரிவித்தார்.