| ADDED : ஏப் 20, 2024 05:49 AM
விருத்தாசலம், : விருத்தாசலத்தில் வாக்காளர் பட்டியலில் குளறுபடி இருப்பதாக கூறி அ.தி.மு.க., நிர்வாகி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.விருத்தாசலம் சட்டசபை தொகுதியில் 286 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டு, காலை 7:00 மணி முதல் ஓட்டுப்பதிவு அமைதியான முறையில் நடந்தது. மாலை 4:00 மணியளவில், கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரியில் செயல்படும் பூத் எண் 217, 218 ஆகியவற்றுக்கு ஓட்டுபோட சென்ற வாக்காளர்கள் சிலரின் பெயர்கள் பட்டியலில் இல்லை.தகவலறிந்த அ.தி.மு.க., மண்டல செயலாளர் கவுன்சிலர் அருண், வாக்காளர்களை அழைத்துச் சென்று, ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதற்கு, வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் உரிய ஆவணங்களுடன் ஓட்டு போடுங்கள்.பட்டியலில் பெயர் இல்லாதது குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது எனவும், தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலரை சந்தித்து புகார் தெரிவிக்குமாறு கூறப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த வாக்காளர்கள் திட்டமிட்டே பெயர்களை நீக்கியதாவும், தி.மு.க.,வினரின் சதி என்றும் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.அங்கிருந்த போலீசார் அவர்களை சமாதானம் செய்து வெளியேற்றினர். பின்னர், மாநில தேர்தல் ஆணையர் மற்றும் கலெக்டரிடம் புகார் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்போம் எனக்கூறி அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.