விருத்தாசலம்: சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, மதுவிலக்கு மற்றும் ஆயத்த தீர்வு துறை சார்பில், விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியை கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கி, கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில், கலால் துறை உதவி ஆணையர் சந்திரகுமார், ஆர்.டி.ஓ., சையத் மெஹ்மூத், தாசில்தார் உதயகுமார், டி.எஸ்.பி., ஆரோக்கியராஜ், டி.இ.ஓ., துரைப்பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) பாலசுப்பிரமணியன் வரவேற்றார்.இதில், தொடக்க கல்வி அலுவலர் சேகர், இன்பேன்ட் பள்ளி தாளாளர் விஜயகுமாரி, இன்ஸ்பெக்டர்கள் முருகேசன், தெய்வசிகாமணி மற்றும் போலீசார், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். முன்னதாக, போதைப் பொருளுக்கு எதிரான உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அதைத் தொடர்ந்து விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் துவங்கிய பேரணி, பாலக்கரை வழியாக பஸ் நிலையம் வரை சென்றது.இதில், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் இன்பேன்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு, போதையினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.