சிதம்பரம் : சிதம்பரத்தில் போலி சான்றிதழ் தயாரித்து விற்பனை வழக்கில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணையை துவங்கினர்.சிதம்பரம் அடுத்த மீதிகுடி - கோவிலாம்பூண்டி இடையே உள்ள பாலத்தின் அடியில் பள்ளி , கல்லுாரி, பல்கலை சான்றிதழ்கள் கடந்த 18ம் தேதி சிதறி கிடந்தது. இதுகுறித்து கிள்ளை போலீசார் வழக்கு பதிந்து சிதம்பரம் மன்மதசாமி நகர் நடராஜரத்தின தீட்சிதர் மகன் சங்கர்,37; மீதிகுடி சுப்பையா மகன் நாகப்பன்,48; ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கட்டு கட்டாக போலிச் சான்றிதழ்கள், இரண்டு கம்ப்யூட்டர்கள், ஒரு லேப்டாப், பிரிண்டர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இவ்வழக்கு தொடர்பாக பெண் ஒருவரிடம் விசாரித்து வருகின்றனர். மேலும், கவுதமன் என்பவரை தேடிவருகின்றனர்.விசாரணையில், தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் அண்ணாமலை, பாரதிதாசன், கேரள பல்கலை சான்றிதழ்கள், பல்வேறு பள்ளி, கல்லுாரி சான்றிதழ்கள் போலியாக தயாரித்து விற்பனை செய்து கோடி கணக்கில் பணம் சம்பாதித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட சங்கர், நாகப்பன் உள்ளிட்ட 6 பேரின் வங்கி கணக்குகளை போலீசார் முடக்கினர்.இவ்வழக்கு விசாரணை பல மாநிலங்களில் விரைவடையும் என்பதால், வழக்கை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்ற ஏ.எஸ்.பி., ரகுபதி, அரசுக்கு பரிந்துரை செய்தார். இந்நிலையில் போலீஸ் தலைமைய உத்தரவைத் தொடர்ந்து இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி.,போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனையொட்டி சிதம்பரத்தில் முகாமிட்டு விசாரணையை துவக்கி உள்ள சி.பி.சி.ஐ.டி.,போலீசார் நேற்று, சான்றிதழ்கள் சிதறி கிடந்த மீதிகுடி செல்லும் வழியில் உள்ள பாலம் பகுதியை பார்வையிட்டனர். பின்னர் கைது செய்யப்பட்ட சங்கர், நாகப்பன் ஆகியோரின் வீடுகளை பார்வையிட்டு தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தினர்.சிதம்பரம் போலிச் சான்றிதழ் விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணையை துவக்கி உள்ளதால் மீண்டும் பரபரப்பு தொற்றிக் கொண்டது.