| ADDED : ஜூலை 28, 2024 04:37 AM
விருத்தாசலம் : டி.மாவிடந்தல் கிராமத்திலிருந்து தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் சாலையை சீரமைக்க பத்து கிராம மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.மங்கலம்பேட்டை அடுத்த டி.மாவிடந்தல் ஊராட்சியில் ஆயிரக்கணக்கானோர் வசிக்கின்றனர். இவ்வழியாக திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலைக்கு எளிதில் செல்ல முடியும். இதனால் கோணாங்குப்பம், எடச்சித்துார், பிஞ்சனுார், சிறுவம்பார், காட்டுப்பரூர், மு.அகரம் உட்பட பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் அன்றாட பணிகளுக்கு சென்று வருகின்றனர்.இந்நிலையில், டி.மாவிடந்தல் கிராமத்தில் இருந்து தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் 3 கி.மீ., தார் சாலை பத்து ஆண்டுகளுக்கு மேலாக பராமரிப்பின்றி குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால் வாகனங்கள் செல்லும்போது பஞ்சராவது, ஆக்சல் முறிவது போன்ற இடர்பாடுகளை ஓட்டுனர்கள் சந்திக்கும் அவலம் ஏற்படுகிறது.அப்போது, வாகன பழுத சீரமைக்க வேண்டி, 10 கி.மீ., தொலைவிற்கு வெளியே உள்ள மங்கலம்பேட்டை அல்லது உளுந்துார்பேட்டையில் இருந்து வர வேண்டியுள்ளது. இதனால் பள்ளி மாணவர்கள், பொது மக்கள் மிகுந்த சிரமமடைந்து வருகின்றனர். எனவே, டி.மாவிடந்தலில் இருந்து தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் 3 கி.மீ., தார் சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.