| ADDED : ஆக 09, 2024 04:33 AM
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் சிறுமிக்கு பிறந்த பெண் குழந்தை இறந்ததால், தாசில்தார் முன்னிலையில் தோண்டியெடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.திருச்சியை சேர்ந்த 16 வயது சிறுவன், விருத்தாசலத்தில் தங்கி ஓட்டலில் வேலை செய்தபோது, அப்பகுதி சேர்ந்த சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. அதில், சிறுமி கர்ப்பமானதால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், கடந்தாண்டு ஜூன் 19ம் தேதி அளித்த புகாரின்பேரில், விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீசார் கடந்த ஏப்ரல் 24ம் தேதி போக்சோ பிரிவில் சிறுவனை கைது செய்து கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனர்.இந்நிலையில் ஒன்றரை மாதத்திற்கு முன் சிறுமிக்கு பிறந்த பெண் குழந்தை, இருதய பிரச்னை மற்றும் மூச்சு விடுவதில் பிரச்னை காரணமாக இறந்தது. உடன், உடல் அடக்கம் செய்யப்பட்டது. தகவலறிந்த போலீசார், போக்சோ வழக்கு விசாரணைக்கு குழந்தையின் உடலை பிரேத பரிசோதனை செய்ய முடிவு செய்தனர்.அதன்படி, விருத்தாசலம் தாசில்தார் உதயகுமார், மகளிர் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பிருந்தா முன்னிலையில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவக் குழுவினர், பெண் குழந்தையின் உடலை தோண்டி எடுத்து, அதே இடத்தில் பிரேத பரிசோதனை செய்தனர். டி.என்.ஏ., மாதிரிக்காக குழந்தையின் உடல் உறுப்புகள், பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.