| ADDED : ஜூலை 31, 2024 03:53 AM
குள்ளஞ்சாவடி ; வடலுார் தனியார் பள்ளியில் விளையாட்டு பயிற்சியின் போது தலையில் ஈட்டி பாய்ந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவர் உயிரிழந்தார்.கடலுார் மாவட்டம், வடலுார், தர்ம சாலையை சேர்ந்தவர் திருமுருகன், 35; இவரது மகன் கிஷோர், 15; வடலுார் சந்தைதோப்பு எஸ்.டி.சியோன் மெட்ரிக் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 24ம் தேதி மாலை பள்ளி மைதானத்தில் மாணவர்களுக்கு விளையாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது. அப்போது, சக மாணவர் எறிந்த ஈட்டி, அங்கு நின்றிருந்த கிஷோர் தலையில் குத்தியது. விழுப்புரம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று முன்தினம் மூளைச்சாவு அடைந்ததாக டாக்டர்கள் கூறினர். அதனைத் தொடர்ந்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் முன்வந்த நிலையில் நேற்று அதிகாலை, மாணவர் கிஷோர் உயிரிழந்தார்.இதுகுறித்து வடலுார் போலீசார் வழக்கு பதிந்து பள்ளி தாளாளர் பிரவீன், ஆசிரியர்கள் பிரவீன் குமார், சரவணன், விநாயகமூர்த்தி ஆகியோரிடம் விசாரித்து வருகின்றனர்.