விருத்தாசலம்:கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த மாத்துார் காலனியை சேர்ந்தவர் பாக்யராஜ், 40; ரவுடி. அதே பகுதியை சேர்ந்த ஊராட்சி தலைவர் சுப்ரமணியன் மகன் ராம்கி, 38; நண்பர்களான இருவரும் 11ம் தேதி காலை, 10:00 மணியளவில் ஒன்றாக மது குடித்தனர்.அப்போது, அவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தில், ஆத்திரமடைந்த ராம்கி, பீர் பாட்டிலால் பாக்யராஜ் தலையில் தாக்கினார். படுகாயமடைந்த அவர், ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். மறுநாள் காலை, 11:50 மணிக்கு, உறவினர்கள் பாக்யராஜை மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.மேல் சிகிச்சைக்கு தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மங்கலம்பேட்டை போலீசார் ராம்கியை கைது செய்தனர். இந்நிலையில், பாக்யராஜ் நேற்று காலை சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது உறவினர்கள், ஊராட்சி தலைவர் சுப்ரமணியன் வீட்டை முற்றுகையிட்டனர்.அவர்களிடம் டி.எஸ்.பி., ஆரோக்யராஜ் மற்றும் போலீசார் பேச்சு நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், ஊராட்சி தலைவர் சுப்ரமணியன், அவரது மகன்கள் ராம்கி, மணிமாறன் ஆகியோர் சேர்ந்து பாக்யராஜை அடித்து கொலை செய்துள்ளனர். ஆனால், ராம்கியை மட்டும் கைது செய்துள்ளனர். சுப்ரமணியன், அவரது மற்றொரு மகனை கைது செய்ய வேண்டும் என்றனர்.தொடர்ந்து போலீசார், ஊராட்சி தலைவர் சுப்ரமணியன், அவரது மனைவி மற்றும் மகன் உள்ளிட்ட உறவினர்களை ரோந்து வாகனத்தில் ஏற்றி பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்ல முயன்றனர். ஆத்திரமடைந்த பாக்யராஜ் உறவினர்கள், போலீஸ் வாகனத்தை சிறைபிடித்ததால் பரபரப்பு நிலவியது. நீண்ட முயற்சிக்கு பின் ஊராட்சி தலைவர் குடும்பத்தினரை பாதுகாப்பாக அழைத்து சென்றனர். தொடர்ந்து மாத்துார் கிராமத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.