| ADDED : மே 13, 2024 05:23 AM
கடலுார்: கடலுார் மீனவர்கள் வலையில் அதிகளவில் கானாங்கத்தை, கவளை மீன்கள் சிக்கியது.கடலுார் துறைமுகத்தில் இருந்து நாள்தோறும் தேவனாம்பட்டினம், சிங்காரத்தோப்பு, அக்கரைக்கோரி, சோனாங்குப்பம், ராசாப்பேட்டை, சித்திரைப்பேட்டை ஆகிய மீனவ கிராமங்களில் இருந்து மீனவர்கள் படகுகள் மூலம் கடலுக்கு சென்று மீன் பிடித்து வருகின்றனர். தற்போது மீன்பிடி தடைகாலம் இருந்து வருவதால் மீன்பிடிக்க விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை. நாட்டுப்படகுகள், பைபர் படகுகளில் செல்லும் மீனவர்கள் அனுமதிக்கப்பட்ட துாரத்திற்குள் சென்று மீன் பிடித்து வருகின்றனர்.நேற்று மீனவர்கள் வலையில் கானாங்கத்தை, கவளை மீன்கள் அதிகளவில் சிக்கியது. இந்த மீன்களை படகில் குவித்துக் கொண்டு, துறைமுகம் மார்க்கெட்டிற்கு கொண்டுவந்தனர். இந்த மீன்களை வாங்குவதற்கு நுாற்றுக்கணக்கான வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் திரண்டதால் பரபரப்பாக காணப்பட்டது. ஒரு கிலோ கானாங்கத்தை மீன் 120 ரூபாய்க்கும், ஒரு கிலோ கவளை 80 முதல் 100 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்பட்டது.