| ADDED : ஏப் 25, 2024 03:46 AM
புவனகிரி: தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்க, தேர்தல் ஆணையத்திற்கு, ஊழல் எதிர்ப்பு இயக்கம் கோரிக்கை வைத்துள்ளது.இதுகுறித்து தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாஹூ உள்ளிட்ட அதிகாரிகளுக்கு, ஊழல் எதிர்ப்பு இயக்கத் தலைவர் வழக்கறிஞர் குணசேகரன் அனுப்பியுள்ள மனு:தமிழகத்தில் உள்ளாட்சி, சட்டசபை மற்றும் லோக்பா தேர்தலின் போது, ஆசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். ஆனால், அவர்களுக்கு போதுமான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரவதில்லை. தற்போது, அரசு பொதுதேர்வு முடிந்த கையோடு, விடைத்தாள் திருத்துதல், பிற வகுப்பு மாணவர்களுக்கு ரிசல்ட் வெளியிடுதல் உள்ளிட்ட பணிச்சுமையிலும், ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டு தங்களின் கடமையை செய்துள்ளனர்.அப்படி பணியில் ஈடுபட்ட ஆசிரியைகள் உள்ளிட்டோருக்கு, வாக்குச்சாவடி மையங்கள் அமைந்துள்ள இடத்தில் அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பும் இல்லாமல் மன உளைச்சலுடன் மூன்று நாட்கள் பணிபுரிந்துள்ளனர். மேலும், பல்வேறு இடங்களில் ஓட்டுச்சாவடிகளில் சிலர் குடிபோதையில் வந்து ரகளையில் ஈடுபடுகின்றனர். இதனாலும் அவர்கள் பாதிப்பை சந்தித்துள்ளனர். எனவே, இனி வரும் தேர்தல் காலங்களில் பணியில் அமர்த்தப்படும் அரசு ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்புடன், அடிப்படை வசதிகளை முழுமை படுத்தி, ஊக்கத் தொகை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.