| ADDED : நவ 28, 2025 05:06 AM
நெய்வேலி: நெய்வேலியில் சொத்து தகராறில் பெண்களை தாக்கிய ரவுடி உள்ளிட்ட 2 வாலிபர்களை நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் கைது செய்தனர். கடலுார் மாவட்டம், நெய்வேலி அடுத்த கீழுர் மெயின்ரோடு, புதுபெருமத்துாரைச் சேர்ந்தவர் கொளஞ்சி மனைவி வசந்தி, 36; இவருக்கும், அவரது வீட்டின் அருகி லுள்ள செல்வராஜ் என்பவருக்கும் சொத்து சம்பந்தமாக கடந்த, 20 ஆண்டுகளாக பிரச்னை உள்ளது. இந்நிலையில், நேற்றுமுன்தினம், செல்வராஜின் ஆதரவாளர்கள், நெய்வேலி அடுத்த செடுத்தான்குப்பத்தைச் சேர்ந்த ராஜசேகர், வீரசிங்கன்குப்பத்தைச் சேர்ந்த வேலு மகன் சம்பத்குமார்,26, மற்றும் சிலர் ஜே.சி.பி., இயந்திரத்தை கொண்டு வந்து வசந்தியின் வீட்டின் முன்பிருந்த மரங்கள், இருசக்கர வாகனங்களை சேதப்படுத்தினர். இதை தட்டிக்கேட்ட வசந்தி மற்றும் வீட்டிலிருந்தவர்களை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்து, அவர்களது மொபைல் போன்களை சேதப்படுத்தினர். புகாரின் பேரில் நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர். நேற்று காலை நெய்வேலி அரசு தென்னம்பண்ணை அருகே பதுங்கியிருந்த ராஜசேகர் மற்றும் சம்பத்குமாரை போலீசார் கைது செய்தனர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய மற்றவர்களையும் தேடி வருகின்றனர்.