| ADDED : செப் 04, 2011 11:07 PM
கடலூர் : பண்ருட்டி மற்றும் புதுச்சேரி பகுதிகளில் பட்டப் பகலில் பூட்டிய வீடுகளில் புகுந்து திருடிய பலே ஆசாமிகள் இருவரை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம், பண்ருட்டி ராஜாஜி சாலையை சேர்ந்தவர் சண்முகம் (75). வீட்டிலேயே அடகு கடை நடத்தி வந்தார். கடந்த மே மாதம் 17ம் தேதி இவரது வீட்டினுள் புகுந்த மர்ம ஆசாமிகள், சண்முகத்தை கொலை செய்துவிட்டு பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளை அடித்துச் சென்றனர். இதுகுறித்து பண்ருட்டி போலீசார் வழக்கு பதிந்து குற்றவாளிகளை தீவிரமாக தேடிவருகின்றனர். இதில் சந்தேக நபர்களை பிடித்து விசாரித்ததில் தமிழகம் மற்றும் கேரளாவில் நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் துப்பு துலங்கியது. ஆனால், சண்முகம் கொலை வழக்கில் துப்பு கிடைக்காமல் தனிப்படை போலீசார் திணறி வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பூட்டிய வீடுகளின் கதவை உடைத்து திருடிய வழக்கில் கைதாகி சிறை தண்டனை அனுபவித்து வந்த புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் அடுத்த உலவாய்க்கால் பகுதியை சேர்ந்த சதீஷ் என்கிற பழனி, 24 என்பவர் ஐந்து மாதத்திற்கு முன் விடுதலையானது தெரிய வந்தது. எஸ்.பி., பகலவன் உத்தரவின் பேரில், கடலூர் டி.எஸ்.பி., வனிதா மேற்பார்வையில் சப் இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையிலான தனிப்படை போலீசார், பண்ருட்டி பகுதியில் பதுங்கியிருந்த சதீஷ் என்கிற பழனி மற்றும் கடலூர் செல்லங்குப்பத்தை சேர்ந்த சக்திவேல், 35 ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், இருவரும் மேலும் ஒருவருடன் சேர்ந்து பட்டப் பகலில் பூட்டியிருந்த பண்ருட்டி எல்.ஆர்.பாளையத்தில் அண்ணாமலை வீட்டில் 13 கிராம் தங்க நகை, விழமங்கலம் முருகன் வீட்டில் 34 சவரன் நகை, புதுப்பேட்டை அடுத்த கோட்லாம்பாக்கம் நஜிரா வீட்டில் 5 சவரன் நகை, புதுச்சேரி மாநிலம் தேங்காய்திட்டில் ஒரு வீட்டில் 20 சவரன் நகைகளை திருடியதையும், சமீபத்தில் நெல்லிக்குப்பத்தில் கொடுக்கல் வாங்கல் தகராறில் ஒருவரை வெட்டிக்கொலை செய்ய முயன்ற சம்பவத்தில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டனர். அவர்களிடம் இருந்து 44 கிராம் தங்க நகைகள், ஒரு லட்சத்து 3,000 ரூபாயை பறிமுதல் செய்தனர். இருவரையும் நேற்று மாலை கடலூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த திருட்டு வழக்குகள் தொடர்பாக மேலும் ஒருவரை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.